காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

தேச பக்தனானேன்

12 02 1984 ஞாயிற்றுக்கிழமை


1908ம் வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி நான் பிறந்ததாக முன்னரே எழுதியுள்ளேன். 1905ம் வருடம் வெள்ளையராட்சியில் வங்கப் பிரிவினை செய்யப்பட்டது. இதை எதிர்த்து நாடெங்கிலும் சுதேசி இயக்கம் தோன்றி சுதந்திர உணர்ச்சி உத்வேகம் கொண்டது. 1911ஆம் வருடம் தமிழகத்தின் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் வெள்ளையரான ஆஷ்  துரையை மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதன் என்ற பிராமண இளைஞன் சுட்டுக் கொன்று விட்டுத் தன் இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனான். நான் பிறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் தோன்றிய சுதேசி இயக்கமும் நான் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பின் நடந்த ஆஷ்துரை கொலை நிகழ்ச்சியும் என் பெற்றோர்களின் உள்ளங்களைப் பாதித்திருக்கக் கூடும் என்று நம்ப இடமுள்ளது.

என் தகப்பனார் என் 20வது வயதில் 1928ம் வருடம் காலமானார். என் நினைவு தெரிந்த வரையில் அவர் சேலம் கைத்தறி குண்டஞ்சு வேஷ்டிதான் அணிந்து வந்தார். அஸ்கா சர்க்கரை (லண்டன் ஜீனி)யை உபயோகிக்காமல் சேலம் பழுப்பு குழைவு சீனியைத்தான் உபயோகித்து வந்தார். அந்நாட்களில் இதை வைதீக மனப்பாங்கென்றே எண்ணினேன். ஆனால் பின்னாட்களில் யோசிக்குங்காலை அது அவருள் இருந்த சுதேசிப்பற்று என எண்ணவும் இடமுள்ளது. ஆகவே என் சுதேசிப் பற்று எனக்கு என் பெற்றோர்களின் எண்ணத் தாக்குதல்களாலும் ஏற்பட்டிருக்கக் கூடும்.

1916ம் வருடம் அன்னி பெஸன்ட் அம்மையார் தோற்றுவித்த Indian Home Rule Movement தீவிரமாக நடந்து வந்தது. அப்போது எனக்கு எட்டு வயது. மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்' என்ற பாட்டை உரக்கப் பாடும் ஆற்றல் என்னிடம் இருந்தது. அப்போது பிரபல வக்கீலான சாது கணபதி பந்துலு என்பவர் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பொதுக் கூட்டங்களில் என்னை மேஜை மீது ஏற்றி நிறுத்தி பாடச் சொல்வார். நானும் பாடுவேன். கையில் சாக்லேட்டும் நீளமான பெரிய Safety Pin கொண்ட Home Rule Badgeம் எனக்குத் தருவார்கள். இப்படியாகத்தானே தேசப்பற்று என்னை வந்து தொற்றிக் கொண்டது.

பின்னர் காந்திஜி அலி சகோதரர்களுடன் சேலம் விஜயம் செய்தபோது நாமக்கல்லில் வேலை பார்த்து வந்த என் சகோதரர் சென்று பார்த்து வந்து சொன்ன செய்திகளும், ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள் மார்ச் 18ம் தேதி கைதாகி சிறை சென்றதும, அதன் காரணமாக மாதந் தோறும் 18ம் தேதி நடந்த பஜனைகளில் பங்கேற்றதும், தமிழாசிரியர் சொர்ணம் பிள்ளையிடம் அவ்வப்போது அடிகள் வாங்கியதும், 1923 - 24ல் நடந்த சுயராஜ்யக் கட்சி தேர்தல் பிரசாரமும் இது போன்ற பல சந்தர்ப்ப சேர்க்கைகளும் என் தேசபக்தியைக் கிளர்ந்தெழச் செய்தன.
(13 02 1984) தீரர் சத்தியமூர்த்தி, வேலூர் வி.எம்.உபயதுல்லா சாயபு, கோடையிடி குப்புசாமி முதலியார், பண்ருட்டி தெய்வநாயக அய்யா, நெல்லை எஸ்.என். சோமயாஜுலு போன்றோர் அனல் கக்கும் ஆவேசப் பிரசங்கங்கள் ஆற்றுவர். இவைகளைக் கேட்டும், என் தேசப்பற்று வளர்ந்தது. கூட்டங்களுக்குச் சென்று விட்டு வெகு நேரம் சென்று வீட்டுக்கு வருவேன். தன் மூத்த புதல்வனை இழந்து விட்ட தந்தையார் விரக்தி காரணமாக என்னைக் கண்டிப்பதில்லை. அதே விரக்தி காரணமாக என் தாயார் நானும் கை நழுவிப் போய் விடுவேனோ என்ற பயத்தில் என்னை மிகவும் கண்டிப்பார். ஆயினும் என் தேசபக்தி நாளுக்கு நாள் வளர்ந்ததே யன்றிக் குறையவில்லை. என் சகோதரர் ரங்கசாமி பம்பாயில் B B & C I RAILWAYல் இஞ்ஜினியராகத் தற்காலிக வேலையிலிருந்தார். அவருக்கு பர்ஸ்ட் க்ளாசில் சென்று வர குடும்ப பாஸ் உண்டு. நான் படிப்பில் கவனமில்லாது தேசிய உணர்வுடன் அலைவதைக் கண்ட என் பெற்றோர் என் அண்ணனுடன் கலந் தாலோசித்து என்னை பம்பாய்க்கு அனுப்பத் தீர்மானித்தனர். நெல்லையில் பிறந்த நான், திருச்சியைத் தாண்டி வடக்கே எந்த ஊருக்கும் சென்றிராத எனக்கு, பம்பாய் செல்வது - அதுவும் முதல் வகுப்பு பயணம் செய்வது - அந்த வயதில் நழுவ விடக் கூடாத அரிய வாய்ப்பு.

ஏற்கனவே நெல்லையில் சுமார் ஐம்பது சிறுவர்களைக் கொண்ட ஒரு வானர சேனையின் தலைவன் நான். 1927ம் வருடம் காந்தியடிகள் ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நெல்லைக்கு கதர்ப் பணிக்கு நிதி வசூல் செய்ய யாத்திரை வருவதாக இருந்தது. எங்கள் குழுவின் சார்பில் சுமார் ரூ. 167 வரை வசூல் செய்தேன். ஆனால் அதை காந்தியடிகளிடம் சமர்ப்பிக்கு முன் நான் பம்பாய் சென்று விட நேர்ந்தது. குழுவின் சார்பில, சு. குற்றால லிங்கம் என்ற உறுப்பினர் காந்திஜியிடம் சேர்ப்பித்தார் என்று பம்பாய்க்கு கடிதம் வந்தது. பம்பாய் சென்று ஒரு மாத காலம் நகரைச் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது. பின்னர் என் சகோதரர் விருப்பப்படி வேலை தேடியலைந்தேன். வீடு கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையி லமர்ந்தேன்.

பம்பாயில் கதர்ப்பணி...

(19 02 1984) நான் வேலையலமர்ந்த இரண்டொரு வாரங்களில் பம்பாயில் எனக்கொரு நண்பர் கிடைத்தார். அவர் பெயர் பாலகிருஷ்ணன். மன்னார் குடியைச் சேர்ந்தவர். இவர் அன்றைய G.I.P RAILWAYல் (இன்று Central Railway) நிர்வாக ஆபீஸில் வேலை பார்த்து வந்தார். காந்தியக் கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்ததால் ரயில்வே உத்தியோகத்தை ராஜினாமா செய்து ஆமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு தொண்டராகச் சேர்ந்தார். அங்குள்ள கட்டு திட்டங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள முடியாததால் காந்தியடிகளிடம் தெரிவித்து விட்டு மீண்டும் பம்பாய் வந்து ஒரு போட்டோ சாதனங்கள் விற்பனை செய்யும் கம்பெனியில் வேலைக்கமர்ந்தார். அப்போது அவருக்கு திருமணமாகி யிருக்கவில்லை. இவர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீபாதசங்கர் என்பவரும் ஆசிரமத்தில் தொண்டராக இருந்து வந்தார். திரு பாலகிருஷ்ணனுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு என் பாரதி பாட்டுக்களும் தேசிய உணர்வுகளும் எங்களிருவரிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் இருவரின் மாதச் சம்பளத்தை கல்பாதேவி காதி பண்டாரில் கொண்டு கொடுத்து கதர் ஜவுளி எடுத்து வந்து எங்கள் அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் உரக்கக் கூவி தெரு விற்பனை செய்ய ஆரம்பித்தோம். தினமும் ரூ 50 முதல் ரூ 100 வரை விற்பனை செய்ய முடிந்தது. ஒரு ஆண்டில் சுமார் ரூ 25000 பெறுமானத்திற்கு விற்பனை செய்தோம். இந்த விவரம் காந்திஜிக்கு பாலகிருஷ்ணன் எழுதினார். பாபுஜி அவர்களும் எங்கள் பணியைப் பாராட்டிக் கடிதம் எழுதினார்.

(பாலகிருஷ்ணன் 1930 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ராஜாஜி தலைமை யில் நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாக்ரக பாதயாத்திரையில் பொறுக்கி எடுக்கப்பட்ட தியாக மணிகளான நூறு தொண்டர்களில் ஒருவராகப் பங்கேற்று சிறை சென்றார். இந்த யாத்திரையில் பம்பாயில் நல்ல வேலைகளில் இருந்த ஒன்பது பேர்கள் வேலைகளை ராஜினாமா செய்து விட்டு திரு கே ஏ சுப்பிரமண் யம் என்பவரை தலைவராகக் கொண்டு திருச்சி வந்து கலந்து கொண்டார்கள். ஆகவே அவருக்கு கேப்டன் சுப்பிரமணியம் என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது.)

1928 ஆகஸ்டு மாதம் ஏழாந்தேதி என் தகப்பனார் காலமான பின் என் எண்ணமெல்லாம் முழு நேர தேசத் தொண்டனாக ஆக வேண்டுமென்ற உந்துதல் என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இதையறிந்த விதவையான என் தாயார் ஏற்கனவே தன் முதல் மகனை பத்து ஆண்டுகளுக்கு முன் இழந்து விட்டதால் என்னையும் என் தேசப்பற்று உணர்வுகளையும் தெரிந்து கொண்டு என் பம்பாய் வேலையை விட்டு வீடு வந்து சேரும்படி என் அண்ணனிடம் நச்சரிக்கத் தொடங்கி விட்டாள். 1929 ஏப்ரலில் என் மருமாள் சாலுவின் திருமணம் பம்பாயில் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த திரு வி.கே.கணபதியுடன் நெல்லையில் நடந்ததற்கு திருநெல்வேலி வந்தவன், மீண்டும் நான் வேலைக்கென்று பம்பாய் செல்லவில்லை. ஆக என் பம்பாய் வாசம் 1927 ஜூலை முதல் 1929 ஏப்ரல் வரை சுமார் 21 மாதங்கள் மட்டுமே.

(20 02 1984) திருநெல்வேலி வந்த சில வாரங்களில் திருநெல்வேலி ஜில்லா போர்டில் Special Supervisor ஆக வேலை பார்த்து வந்த ரங்கசாமி அய்யர் (என் சகோதரர்) இடமே L.F.Maistry ஆக உத்தியோகம் கிடைத்து வேலை பார்த்து வந்தேன். என் சகோதரரும் தேசிய உணர்வு உடையவர். தீபாவளி சமயம் கதர் துணி விற்பனை செய்ய எண்ணி விளாத்திகுளத்திலிருந்து திருநெல்வேலி கதர் வஸ்திராலயம் சென்று சுமார் ரூ 200 க்கு கதர் ஜவுளி எடுத்து வந்தேன்.

அப்போது கதர் வஸ்திராலயத்தில் 'விமோசனம்' என்ற தமிழ் மாதப் பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததில் ஒரு அணா விலை கொடுத்து வாங்கினேன். அது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து ராஜாஜியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அது தனிப்பிரதி விலை ஒரு அணாவா யிருந்தும் வருடச் சந்தா தபால் செலவு உள்பட ரூபாய் ஒன்று. மறுதினமே ரூ 1 மணியார்டர் மூலம் ஒரு அணா மணியார்டர் கமிஷனில் அனுப்பினேன். 3, 4 தினங்களில் பணம் பெற்றுக்கொண்ட ரசீதில் ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற கையெழுத்துடன் வந்தது. அத்துடன் ஒரு கார்டும் அவர் எழுதியிருந்தார். 'தங்கள் எம்.ஓ. கிடைத்தது. வந்தனம். தங்களை சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டோம். நீங்கள் முயன்றால் மேலும் சில சந்தாதாரர்களைச் சேர்த்துத் தர முடியுமென்று எண்ணுகிறேன். தங்கள் ஆதரவு தாருங்கள்.' என எழுதியிருந்தார்.

விளாத்திகுளம் சிறிய ஊர். அரசு அதிகாரிகள் அதிக பட்சம் எல்லாமாகச் சேர்ந்து 20 பேர்களுக்கு மேற்படாது. என் சகோதரர் சூப்பர்வைசர். ஆகவே நான் யாரைக் கேட்டாலும் ஒரு ரூபாய் தந்து விடுவார்கள். ஐந்து ரூபாய் சேர்ந்ததும் ஒரு அணா கமிஷன் செலவு செய்து எம்.ஓ. அனுப்பி ஒரு அரையணா கார்டில் ஐந்து விலாசங்களையும் எழுதி அனுப்பி வைப்பேன்.
இப்படியாக ஒரு மாதத்திற்குள் சுமார் 75 ரூபாய் வரை சேர்த்து அனுப்பி னேன். இது ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் உள்ளத்தில் என்னைப் பற்றிய நல்ல எண் ணத்தை உண்டாக்கியது. ஏற்கனவே என் உள்ளத்தில் தேசிய உணர்வு கொப்பளித்துக் கொண்டிருந்ததால் ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் கடிதத் தொடர்பு ஏற்பட்டது.

பம்பாயில் கதர் விற்பன செய்து வந்த போதே திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். என் தகப்பனார் இறந்தபின் நான் மீண்டும் பம்பாய் சென்றபின் ஸ்ரீபாதசங்கரின் பரிச்சயம் பாலகிருஷ்ணன் மூலம் ஏற்பட்டது. அப்போதே அவருடன் தமிழகத்தில் கிராம சேவை செய்ய என் வேலையை ராஜினாமா செய்யத் தீர்மானித்து என் சகோதரருக்கு எழுதினேன். என் தாயார் இதையறிந்து மிகவும் வருத்தப்பட்டு ஊருக்கு வந்து விடும்படி எழுதினார். இதே சமயம் எனக்கு ஒரு பெரிய வேனல் கட்டி ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டியதாயிற்று. அதன் காரணமாக ஸ்ரீபாதசங்கருடன் தமிழ் நாடு வரமுடியாது போயிற்று. ஆயினும் அப்போதே காந்தி ஆசிரமத்தில் முழுநேர ஊழியனாகச் சேர்ந்து பணி செய்ய விரும்புவதாகவும் என்னை ஏற்றுக் கொள்ளும் படியாகவும் ராஜாஜிக்கு எழுதியிருந்தேன்.

(22 02 1984) ராஜாஜியிடமிருந்து உடனே பதில் வந்திருந்தது. அதில் டாடா கிருஷ்ணய்யரைப் பார்க்கும்படி எழுதியிருந்தார். அக்கடிதம் வந்த பிற்பகலில் என் அலுவலகத்திற்கு தொலைபேசியில் டாடா கிருஷ்ணய்யர் பேசினார். தன் விலாசத்தையும் அவர் இருக்கும் வீட்டிற்கு பாதை வழி யாவற்றையும் விவரமாகக் கூறி அன்று மாலை 6 மணிக்கே வருமாறு கூறினார். இந்த டாடா கிருஷ்ணய்யர் என்பவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். டாடா கம்பெனியில் முக்கியமான பதவி வகிப்பவர். பம்பாய் மாநில காங்கிரஸ் கமிட்டி பொக்கிஷதார். கதர் பக்தர். நான் அவரை முன்னதாகப் பார்த்த நினைவு இல்லை. அன்று மாலை அவர் வீட்டுக்குச் சென்று தட்டிய கதவைத் திறந்தவர், அவரே என்னைப் பார்த்ததும், 'அட! நீதானா? கே.ஏ. சுப்பிரமணியத்துடன் மாதுங்காவில் கதர் விற்பனை செய்கிறாயே! நான் உன்னைப் பார்த்திருக்கிறேனே!' என்று சொல்லி ராஜாஜியிடமிருந்து அவருக்கு வந்த கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் இந்த வாலிபர் இங்கு ஆசிரமத்தில் சேர விரும்பிக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து இங்குள்ள கஷ்ட நஷ்டங்களைத் தெரிவித்து அவர் விருப்பம் தெரிந்து எழுதுங்கள். ஒரு வாலிபரை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள அவருக்கு வேண்டிய ஆலோசனைகள் கூறவும்.' என எழுதியிருந்தார். நான் ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் 'நான் என் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை யென்றும் என் சகோதரிகள், சகோதரர்கள் யாவரும் திருமணமாகி அவரவர் இடங்களில் சௌகரியமாக இருக்கிறார்கள் என்றும், என் தகப்பனார் காலமாகி விட்டதால் என் விதவைத் தாயார் என் பெரிய சகோதரருடன் இருந்து வருவ தாகவும், என்னால் யாருக்கும் பாரமில்லையென்றும் நான் பம்பாயில் வகிக்கும் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு ஆசிரமத்தில் முழு நேர ஊழி யனாகச் சேர விரும்புவதாகவும்” எழுதியிருந்தேன். டாடா கிருஷ்ணய்யர் என் குடும்ப விவரங்கள் எல்லாம் கேட்டறிந்து நான் பம்பாயில் உத்தியோகம், அலு வலக நேரம் போக மற்ற நேரங்களில் கதர் தெரு விற்பனை செய்து வருவதையும், மற்றும் என் ஆர்வங்களையும் நன்கு துருவித் துருவி கேட்டறிந்தார்.

(23 02 1984) பின்னர் அவர் கூறினார்: 'நீ ஒரு வேலையில் அமர்ந்திருக்கிறாய். அது, உன் வாழ்க்கையைப் பொருளாதார நிலையில் வேறெவ ரையும் எதிர்பாராமல் உன் காலிலேயே நிற்கச் செய்கிறது. உன் தேசிய உணர்வை பிரதிபலிக்க அலுவலக நேரம் போக பாக்கி நேரங்களில் கதர் ஜவுளியைத் தோளில் சுமந்து சென்று பம்பாய் வீதிகளில் உரக்கக் கூவியும், 4,5 மாடிக் கட்டிடங்களில் ஏறி இறங்கியும் உற்சாகமாகத் தெரு விற்பனை செய்து வருகிறாய். இது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. It is a Volunatry Service and a hobby of your own choice. உன்னை விட வயதில் பல வருடங்கள் பெரியவன் என்ற முறையில் கூறுகிறேன். ஏன் நீ ஒரு ஸ்தாபனத்தில் முழு நேர ஊழியனாக அதன் கட்டு திட்டங்களுக்காட்பட்டு இருக்க எண்ணுகிறாய். Why should you loose your individuality and submerge yourself in the institution's adminitrative restrictions. See your friend Balakrishnan, - a nice young man - He resigned his job in the Railway and joined Gandhiji's Sabarmati Ashram with all enthusiasm of a young patriot, But he could not withstand the strain of the daily routine there and the work expected of him and so he has come away. உன் உற்சாகத்தில் தண்ணீர் ஊற்றி அணைப்பதாக நினைக்காதே. I can recommend you to Rajaji, or I can put you under Shri Javiandas Daulat Ram. He wants a Personal Secretary. But he is a very short tempered man. That is why I hesitate. என்று பல சொல்லி 'இன்னும் ஓரிரு வாரங்களில் யோசித்து முடிவு சொல்லு' என்று கூறி இரவு அவருடன் சாப்பிட்டபின் என்னை அனுப்பி வைத்தார். இது நடந்தது 1929 ஜனவரி மாதத்தில்.

(05 03 1984) நான் பம்பாயில் இருந்த போது மிஸ்டர். எச். டி. ராஜா என்பவருடைய நட்பும் ஏற்பட்டது இவர் BB&CI Lower Chawls என்ற பகுதியில் வசித்து வந்தார். ஏதோ காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தார்; தேசியவாதி. திரு பாலகிருஷ்ணன் மூலம் எங்களுக்குள் அறிமுகமாயிற்று, The Young Liberator என்ற ஆங்கில மாதப் பத்திரிகை வெளியிட்டு வந்தார். பல் வேறு தினசரி, வார மாத இதழ்களிருந்து யங் லிபரேட்டரில் வெளியிடத் தகுதி ஆனவற்றைச் சேகரிப்பது, ப்ரூஃப் பார்ப்பது, டெஸ்பாட்ச் செய்வது போன்ற காரியங்களில் அவருக்கு உதவியாக இருந்தேன். இது 1928ம் வருடம் சில மாதங்கள்தான். 1929ல் பம்பாயை விட்டு திருநெல்வேலி வந்து விட்டேன். எங்கள் தொடர்பு நின்று விட்டது. இந்த எச்.டி.ராஜா தான் பின் நாட்களில் வான்கார்ட் இன்சூ ரன்ஸ் கம்பெனியின் அதிபராக மிகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து மறைந்தார். நான் காந்தி ஆசிரம ஊழியனாகச் சேர்ந்து பணியாற்றி வந்ததனால் அவருடைய தொடர்புக்குத் தேவையில்லாமல் போய் விட்டது.

திரு ஸ்ரீபாதசங்கருடன் தமிழ்நாட்டின் கிராமங்களில் பணி செய்ய என் பம்பாய் வேலையை ராஜினாமா செய்ய எண்ணி என் சகோதரருக்கு எழுதினேன். என் தாயார் (விதவையாகி விட்டவர்) நான் தேசிய இயக்கத்தில் சேர்ந்து விடுவதை விரும்பாததால் என் வேலையை ராஜினாமா செய்து நெல்லை திரும்பி விடுமாறு வற்புறுத்தினார். இந்த சமயத்தில் எனக்கு ஒரு abcess ஏற்பட்டு ஆபரேஷன் செய்து ஒரு வாரத்திற்கு மேல் படுக்கையிலிருக்க வேண்டியதாயிற்று. ஸ்ரீபாதசங்கரும் தென்னகம் சென்று விட்டார. ஆதலின் அந்த வாய்ப்பும் கை நழுவிப்போயிற்று. Simon Commission Boycott, Gujarat Flood Relief Fund Collection, Khadi Street Hawking போன்றவை என் தேச பக்தியை மேலும் மேலும் கிளர்ந்தெழச் செய்தன. பம்பாயில் வேலை பார்த்து வந்த என் ஊர்க்காரர்கள் ஊருக்குச் செல்லும் சமயம், என் தேச சேவை வேலைகளில் நான் தீவிரமாக இறங்கியிருப்பதையும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட்டு அதிலேயே முழு நேரமும் மூழ்கி விடுவேனென்றும் என் தாயாரிடம் சொன்னார்கள். ஆகவே என் தாயார் நான் நெல்லைக்கே வந்து விட வேண்டுமென்று என் சகோதரர் மூலம் வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ப நான் நெல்லை வர வேண்டிய ஒரு சூழ்நிலையும் உருவாயிற்று.

(06 03 1984) தபால் தந்தி இலாகாவில் பொறியியல் பிரிவு கணக்குத் துறையில் வி. கே. கணபதி பீ.ஏ. வேலை பார்த்து வந்தார். இவர் நெல்லையில் என் சகோதரர் சங்கரனின் பள்ளித்தோழர். இவர் சகோதரர் வீ. கே. சங்கரன் என் பள்ளித்தோழர். எங்கள் குடும்பங்கள் இரண்டும் பரஸ்பரம் பரிச்சய முள்ளவர்கள். என் சகோதரி மீனாம்பாளின் புதல்வி சௌ. சாலு எனகிற விசாலாக்ஷ¤யை வி. கே. கணபதிக்கு பாணிக்கிரஹணம் செய்து கொடுப்பதாய்த் தீர்மானமாயிற்று. இந்த திருமணம் 1929 ஏப்ரல் மாதம் நெல்லை சிக்கல் நரசய்யன் கிராமத்தில் நடந்தது. இதற்கு நான் வர வேண்டியதாயிற்று என் தாயாரின் வற்புறுத்தலை என் சகோதரர் ரங்கசாமி தெரிவித்தபடி பம்பாய் வேலையை ராஜினாமா செய்து விட்டு நெல்லை வந்தேன். ஆக, 1927 ஜூலை மாதம் பம்பாய் சென்ற நான்¢ 1929 எப்ரலில் பம்பாயை விட்டு நெல்லை வந்து சேர்ந்தேன். ஆகவே என் பம்பாய் வாழ்க்கை 21 மாதங்கள் மட்டுமே இருந்தது. நான் பம்பாயில் செய்து வந்த தேசியப் பணிகள் எனக்கு மிகுந்த மனத் திருப்தியை அளித்தது. ஆனல் நெல்லையில் உடனடியாக அவற்றைச் செய்யும் சூழ்நிலை ஏற்படவில்லை. இரண்டு மாதங்கள் சும்மா இருந்த என் தாயார் நான் ஏதாவது வேலையில் சேர வேண்டுமென என் அண்ணனை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். என் சகோதரர் ரங்கசாமி ஜில்லா போர்டு சூப்பர்வைசராகப் பதவி பெற்று விளாத்திகுளத்தில் கட்டப்பட்ட ஆற்று தாம்போதிக்கு மேற்பார்வை யாளராக இருந்தார். ஜில்லா போர்டு இஞ்சினியராக இருந்த திரு என். கிருஷ்ண பிள்ளையின் உத்தரவுப்படி நான் 1929 ஜூன் மாதம் என் சகோதரர் கீழ் L.F.Maistry ஆக நியமிக்கப்பட்டேன். பம்பாயில் ரூ 110 சம்பளம் பெற்று வந்த நான் இங்கு ரூ 30 சம்பளத்தில் உத்தியோகத்தில் அமர்ந்தேன்.
விளாத்திகுளம் சிறிய ஊர். அரசு அதிகாரிகள் 10, 15 பேர்கள் மட்டுமே. என் சகோதரர் ரங்கசாமி இவர்களில் தோரணையுள்ள உத்தியோகஸ்தர். அவருக்கு நல்ல மதிப்பு. அவருடைய இளைய சகோதரர் நான். பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல எனக்கும் அந்த ஊரில் ஓரளவு மதிப்பு கிடைத்தது. Causeway கட்டுவதில் சுமார் 200 கூலியாட்கள் பணியாற்றினர். அவர்களுக்கெல்லாம் என் சகோதரர் எஜமான். என்னைப் போல வேறு மேஸ்திரிகளும் இருந்தார்கள். அவர்களை மேஸ்திரி சாமி, மேஸ்திரி ஐயா என்றே அழைப்பார்கள். நானோ 'எஜமானின் தம்பி. எனவே, என்னை 'சின்ன எஜமான்' என்று அழைப்பார்கள். வேலையாட்கள் என்னிடம் அதிக அன்பு காட்டினார்கள். நானும் மற்ற சக மேஸ்திரிகளைப் போலில்லாமல் வேலையாட்களுடன் நெருங்கிப் பழகி அவர்கள் அன்பைப் பெற்றேன்.

 அவர்களில் சிலர் குடித்திருப்பார்கள். அவர்களின் குடிபோதை தௌந்தபின், அவர்களை ஒவ்வொருவராகத் தனியே சந்தித்துக் குடியினால் உடலுக்கும், உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் ஏற்படும் கஷ்டங்களை எடுத்துக் கூறுவேன். ஓரிருவர் மட்டுமே திருந்தினர். குடிக்காத பல பேருக்கு என் மீது ஒரு பிரியம் ஏற்பட்டு ஓரிரண்டு மைல் தூரங்களிலுள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று என்னைப் பேசச் சொல்லி ஊர்க்கூட்டம் கூட்டுவார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் 4, 5 பேர்கள் என்னைக் கூடவே வந்து வீட்டில் விட்டுச் செல்வார்கள். இப்படியாக 'சின்ன எஜமான்' செல்வாக்கு வேலையாட்களிடம் பரவிற்று.

(08 03 1984) ஒரு தினம் ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊருக்கு என்னை ஒரு கூடு இல்லாத மொட்டை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அந்த ஊர் கோவில் குருக்கள் வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். 'நீங்க பச்சரிசி பிராமணாளா? புழுங்கரிசி பிராமணாளா?' எனக் கேட்டார்கள். முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல வேளையாக குருக்கள் 'நீங்க வீட்டில் பச்சரிசி சாதம்தானே சாப்பிடுவீர்கள் என்று கேட்டு, “ஆம்” என்ற விடை பெற்று, பச்சரிசி வாங்கி வந்து சமையல் செய்து பரிமாறினார். இரவு கூட்டம் முடிந்து அந்த கிராமத்திலேயே தங்கி காலையில் மொட்டை வண்டியில் வீடு வந்து சேரந்தேன். இப்படியாக என் தேசிய உணர்வும் பணிகளும் தொடர்ந்தன.

பம்பாயில் கதர் விற்பனை செய்தது போல் தீபாவளி சமயமாவது ஒரு வார காலம் கதர் விற்பனை செய்யலாம் என என் சகோதரரையும் கலந்தா லோசித்து அவரிடம் ரூ 200 பெற்றுக் கொண்டு திருநெல்வேலி டவுன் அகில பாரத சர்க்கா சங்க கதர் வஸ்திராலயத்திற்குச் சென்று கதர் ஜவுளி வாங்கி வந்து விளாத்தி குளத்தில் விற்பனை செய்தேன். தினசரி ரூ ஒன்றுக்கும் குறைவான கூலி வாங்கும் வேலையாட்கள் கூட 2, 4 அணா மதிப்புள்ள தேசியக் கொடிகள் வாங்கினர். அந்த ஊரிலிருந்த அரசு உத்தியோகஸ்தர்கள் கூட ரூ 10, 15க்குக் கதர் வாங்கி ஆதரவு தந்தார்கள். மீண்டும் ஒருமுறை திருநெல்வேலி சென்று கதர் ஜவுளி வாங்கி வந்து விற்பனை செய்தேன்.

முதல் தடவை சென்ற போது 'விமோசனம்' என்ற தமிழ் மாதப் பத்திரிகை ஒரு அணா விலை கொடுத்து வாங்கினேன். இது ராஜாஜி அவர்களை ஆசிரி யராகக் கொண்டு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பிரச்சாரச் செய்திகள் கட்டுரைகள் கதைகளைத் தாங்கி வெளி வந்தது. தனிப் பிரதி விலை ஒரு அணா. வருடச் சந்தா தபாலில் பெற ரூபாய் ஒன்று. அதற்கு ரூபாய் ஒன்று “A.Krishnan, L.F.Maistry, Vilathikulam P.O.” என்று என் விலாசம் எழுதி எம்.ஓ. மூலம் அனுப்பினேன். அப்போது ரூபாய் ஐந்து வரை மணி ஆர்டர் கமி ஷன் ஒரு அணா மட்டுமே, அதாவது இன்றைய ஆறு புதுக் காசுகளுக்குச் சமம்.


(22 04 1984) (நீண்ட நாட்கள் இடைவெளிக்குப்பின் இன்று மீண்டும் எழுதுகிறேன். ஏதேதோ காரணங்கள், எழுதவில்லை.)

காந்தி ஆசிரமத்தில் என் மணி ஆர்டர் கிடைத்து ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற கையெழுத்துடன் மணி ஆர்டர் ரசீது வந்தது. அத்துடன் ஓரு கார்டும் வந்தது. 'தங்கள் எம்.ஓ. கிடைத்தது. வந்தனம். தங்களை சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டோம். நீங்கள் முயன்றால் மேலும் சில சந்தாதாரர்களைச் சேர்த்துத் தர முடியுமென்று எண்ணுகிறேன். தங்கள் ஆதரவு தாருங்கள்.' என எழுதி அதிலும் ஆர். கிருஷ்ணமூர்த்திதான் கையெழுத்து இட்டிருந்தார். நானும் ஒரு வார காலத்திற்குள் சுமார் எழுபத்தைந்து சந்தாக்கள் சேர்த்து தினந்தோறும் 5,10,15 ரூபாய்களென மணி ஆர்டர் செய்து வந்தேன். ஒவ்வொரு எம்.ஓ. கிடைத்ததும் என்னை உற்சாகப்படுத்தி திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களிட மிருந்து கார்டு வரும். 21 வயதே ஆன என் இளம் உள்ளத்தில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. 1930 ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் ஒரு புக்போஸ்டு காந்தி ஆசிரமத்திலிருந்து என் பெயருக்கு வந்தது. 1930 ஜனவரி 26ம் தேதி காலை 'சுதந்திரப்பிரகடனம்' பொதுக்கூட்டத்தில் படிக்கப்பட வேண்டுமென்றும் ஒரு கார்டின் விலை காலணா என்றும் புக்போஸ்டில் 30 சுதந்திரப்பிரகடன அட்டைகள் அனுப்பி இருப்பதாகவும், ஏழு அணா மட்டும் வசூல் செய்து எம்.ஓ.வில் அனுப்பும்படியாகவும், இரண்டு பிரதிகளை நான் வைத்துக்கொண்டு பிரகடன வாசகத்தை சிறு சிறு கூட்டங்களைக் கூட்டி அங்கு மக்களிடையே படிக்க வேண்டுமென்றும், ராகி அவர்கள் எழுதியிருந்தார்.

(30 04 1984)  'சுதந்திரப்பிரகடன' அட்டையை காலணாவுக்கு விற்பதாவது என்று எண்ணினேன். அதன் விளைவு முப்பது கார்டுகளையும் முப்பது பேர்களிடம் கொடுத்து ஒவ்வொரு ரூபாய் பெற்று ரூபாய் முப்பதும் ரா.கி. அவர்களுக்கு எம்.ஓ. மூலம் அனுப்பினேன் இதில் ஒரு விசேடம் என்னவென்றால் அந்த ஊர் சப் போஸ்ட் மாஸ்டர், எக்ஸைஸ் இனஸ்பெக்டர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், வக்கீல், ஆப்காரி காண்ட்ராக்டர், நான் வேலை பார்த்து வந்த காஸ்வே காண்ட்ராக்டர், அதன் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த என் சகோதரர், என்னைப் போன்ற மேஸ்திரிகள், சில ஜவுளிக் கடை, மளிகைக்கடை முதலாளிகள், எல்லோரும் ஒரு ரூபாய் கொடுத்து 'சுதந்திரப் பிரகடனம்' பெற் றார்கள். இவர்கள் எல்லோரும் மற்றும் உள்ளூர்ப் பொது ஜனங்களும் சுமார் 200 பேர் கூடி 'சுதந்திரப்பிரகடனம்' வாசித்தார்கள். உள்ளூர் சப் இன்ஸ்பெக்டரும் (எங்கள் நண்பர்) அங்கு ஆஜராகியிருந்தார். சர்க்கார் அலுவலர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தந்தார்கள். 54 ஆண்டுகளுக்குப் பின்பு இதை எண்ணிப் பார்க்கும்போது, மக்களுக்கு எவ்வளவு சுதந்திர தாகம் இருந்தது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அதை விட ஆச்சரியமான விஷயம்: இதிலிருந்து 17வது ஆண்டுகளுக்குள்ளாகவே நாடு விடுதலை பெற்றதும் அதையடுத்த 2வது ஆண்டுக்குள்ளாகவே, நம் அரசியல் சாஸனத்தை வகுத்து சரியாக இருபது ஆண்டுகளில் அதே ஜனவரி 26ம் நாள் 1950ம் ஆண்டு, பரிபூரண சுதந்திர நாடாக உலகுக்குப் பிரகடனப்படுத்தி விட்டோம். இவ்வளவு குறுகிய காலத்தில் அகிம்சை வழியில் உலகில் எந்த நாடும் இதற்கு முன் குடியரசு ஆனதில்லை.

(07 09 1984) (இன்று என் 77வது பிறந்த நாள். 76 வயது முடிந்து 77வது வயது இன்று முதல் ஆரம்பமாகிறது. நேற்று மாலை பவானி நகர் வீட்டிற்கு வந்தேன். சென்ற நாலு மாதங்களுக்கு மேலாக இதைத் தொடர்ந்து எழுத முடியவில்லை. நியாயமான காரணம் எதையும் சொல்ல முடியாது.)

26 01 1930 'சுதந்திரப்பிரகடனம்' வாசித்த நிகழ்ச்சிகளின் அறிக்கையை திரு ரா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு காந்தி ஆசிரமத்திற்கு எழுதினேன். அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதினார். 1929 அக்டோபர் முதல் 1930 ஏப்ரல் 15ந் தேதி வரை சுமார் 15 கடிதங்களாவது ரா.கி. எனக்கு எழுதியிருப்பார். அவைகளின் மதிப்பை அன்று சரியான முறையில் மதிப்பிட முடியாத நான் அவைகளைப் பாதுகாத்து வைக்கவில்லை. இன்று அதைப் பெரிய நஷ்டமாக உணர்கிறேன்.

டொமினியன் அந்தஸ்தை ஏற்கத் தயாராயிருந்த, 01 01 1930 பிறந்த முன்னாள் இரவு 12 மணி வரை இறுதி எச்சரிக்கை விட்டிருந்த நம் தலைவர்கள், காத்திருந்த பின், 'இனி பரிபூர்ண சுதந்திரம்தான் எங்கள் லட்சியம். அதற்குக் குறைவான எந்த அமைப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.' என தீர்க்கமாக அறிவித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசு தன் அதிகார பலத்தைக் காட்டத் தொடங்கியது. அண்ணல் காந்தியடிகள் 'உப்பு சட்டத்'தை எதிர்ப்பது என்று தீர்மானித்து 'தண்டி' யாத்திரை செய்வதென்று முடிவு செய்து அரசுக்கு அறிவித்து விட்டார். நாட்டில் தேச பக்தர்களிடையே தேசிய உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது. 'சுயராஜ்யம் பெறாமல், இந்த சபர்மதி சுயராஜ்ய ஆசிரமத்திற்குத் திரும்ப மாட்டேன் ' என்ற சங்கல்பத்துடன், காந்திஜி நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், 'தண்டி' யாத்திரை புறப்பட்டு விட்டார். தேச முழுவதும் ஆங்காங்கே தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக உப்பு காய்ச்சி சிறை செல்ல முற்பட்டு விட்டனர்.

 தமிழகத்தில் வேதாரணியம் கடற்கரையில் உப்பு காய்ச்சுவதென்று ராஜாஜி தீர்மானித்து, நூறு தொண்டர்களைத் தேர்ந் தெடுத்து, திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் பாத யாத்திரையாகப் பிரசாரம் செய்து கொண்டே போவதென்றும், 1930 ஏப்ரல் 14 ந்தேதி தமிழ்ப் புது வருட தினத்தன்று புறப்பட்டு கிராமம் கிராமமாக காலையிலும் மாலையிலும் பிரசாரம் செய்து கொண்டே சென்று, 30ந் தேதி அதிகாலையில் வேதாரணியம் கடற்கரையில் உப்பு எடுப்பதென்றும் முடிவு செய்து, பத்திரிகைகளில் செய்தி கள் வெளிவந்தன. விளாத்திகுளத்தில் ஜில்லா போர்டில் வேலை பார்த்து வந்த நான், அந்த நூறு பேர்களில் ஒருவனாகச் சேரத் தீவிர எண்ணங் கொண்டேன். என் அண்ணனுடன் கலந்தாலோசித்து அவர் சம்மதம் பெற்று, ஜில்லா போர்டு வேலையை விட்டு விடத் தீர்மானித்தேன்.

பம்பாயில் எவருடன் சேர்ந்து கதர் தெரு விற்பனை செய்தேனோ அந்த பாலகிருஷ்ணனும், கே.ஏ.சுப்ரமண்யன், மற்றும் எனக்குத் தெரிந்த பம்பாய் நண்பர்களும, வேதாரணியம் கோஷ்டியில் இடம் பெற்றிருந்ததைப் பத்திரிகை களில் படித்துப் பார்த்த என் மனம் நிலை கொள்ளாமல் துடித்தது. நான் என் வேலையை ராஜினாமா செய்யத் தீர்மானித்து என்னையும் வேதாரணியம் கோஷ்டியில் ஒரு தொண்டனாகச் சேர்த்து விடும்படி ரா.கிக்கு எழுதினேன். அவரும் என் வயது, சர்க்கார் வேலையை (Quasi Governmental Job) விடுவது, காந்தி ஆசிரமத்திலுள்ள மாறுதலான வாழ்க்கை முறைகள், போன்ற பலவற்றை எழுதி என்னை அதைரியப்படுத்தப் பார்த்தார்.

ஆயினும் நான் மன உறுதியுடன் இருப்பதையறிந்து, 100 தொண்டர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த கோஷ்டியில் என்னைச் சேர்த்துக் கொள்ளலாமென்றும், ஆசிரமத்தில் பொதுச் சமையற் கூடமில்லை யென்றும், அவரவர்கள் தானே சமையல் செய்து கொள்ள வேண்டுமென்றும், அதற்கான பாத்திரம் பண்டங்கள் உடன் கொண்டு வர வேண்டுமென்றும், எந்த நேரமும் அரசு ஆசிரமத்தை மூடி, சீல் வைக்க நேரிடலாமென்றும், அப்போது அவரவர் உடைமைகளையெல்லாம் இழந்து விட வேண்டியிருக்குமென்றும், உயிரையும் திரணமாகக் கருதும் மனம் பெற்றவர்கள் மட்டுமே இந்தத் தியாகத்திற்கு முன் வர வேண்டுமென்றும், என் போன்ற வயதுக்காரர்கள் எதிர் காலத்தை எண்ணிப் பார்த்து, முடிவு செய்து, வீட்டில் பெரியவர்களின் முழுச் சம்மதத்துடன் தெரிவித்தால், பின்னர் தன் கடிதம் பார்த்து ஆசிரமம் வரலா மென்றும், பலவாறாக எழுதினார். நான் மிகுந்த மன உறுதியுடன் இருந்தேன்.

(10 09 1984) நான் என் எட்டாவது வயதிலிருந்தே தேசிய உணர்வு பெற்றிருப்பதுவும், அவ்வப்போது நடக்கும் தேசியப் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று வீட்டுக்கு வெகு நேரங் கழித்து வந்தும், என் தகப்பனார் என்னைக் கண்டிக்காமல் விட்டதுவும், 1921 ஒத்துழையாமை இயக்க காலத்தில் காந்தி யடிகள் கைதான 18ந் தேதியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 18ந் தேதியன்று நடக்கும் தேசிய பஜனை தெருவலம் வருவதில் கலந்து கொள்வதும், ஸ்வராஜ்ய கட்சி தேர்தலில் நின்ற பொது பிரச்சாரம் செய்ததிலும் என் தேசிய உணர்வு அதிகரித்தே வந்தது. என் தகப்பனார் என்னைக் கண்டிக்காததற்கு ஒரு காரணமும் உண்டு. என் மூத்த சகோதரர் ஹரிஹரசுப்ரமணியன் முதல் உலக மகா யுத்தப்படையில் சேர ஒப்பமிட்டு, எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஒப்பந்தத்தை மாற்ற முடியாததால் அவர் பட்டாளத்தில் சேர 1919 ஆகஸ்டு மாதம் திருநெல்வேலியிலிருந்து சென்னை பயிற்சி முகாமுக்குச் சென்ற ஒரே வாரத்தில் Double Pneumoniaவினால் பீடிக்கப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் காலமாகி விட்டார். அந்த அதிர்ச்சி என் தகப்பனாரை வெகுவாக பாதித்து விட்டது. ஆனால் என் தாயாரோ மிகுந்த துக்கப்பட்டவராதலின், நானும் தேசிய இயக்கத்தில் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி விடுவேனோ என்ற ஐயத்தில் என்னை மிகவும் கண்டிப்பார்.

 ஆயினும் என் தேசிய உணர்வு வளர்ந்து கொண்டுதானிருந்தது. பம்பாய் வாழ்க்கையிலம், விளாத்திகுளத்திலும் அது மேலும் வலுப்பெற்றது. ஆதலால் திரு ராகி அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்த எச்சரிக்கை களும், பயமுறுத்தல்களோ என்று எண்ணத்தகு வாசகங்களும், என்னைச் சிறிதும் மனந்தளர வைக்க முடியவில்லை.
என் சகோதரர் ரங்கசாமி மட்டும் நான் தேசத்தொண்டனாக உருவாவதை எதிர்க்கவில்லை. என் தாயாருக்குத் தெரியாமல் என்னை ஊக்குவித்தார் என்றே சொல்லலாம். ஆகவே நான் ஜில்லா போர்டு வேலையை ராஜினாமா செய்து விட்ட செய்தியை ராகிக்குத் தெரிவித்து விட்டு ஆசிரமத்திற்குச் செல்வதற் குண்டான ஏற்பாடுகளைச் செய்து வந்தேன்.

(13 09 1984) என் சகோதரர் ரங்கசாமி என் தேசிய உணர்வுக்கு மதிப்பு கொடுத்தார். குடும்ப பாரம் இல்லாத என்னை தேசத்துக்காக அர்ப்பணிக்கலாம் என எண்ணினார். சிறு வயதிலிருந்தே என் ஆர்வத்தை கவனித்த அவர், எனக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வந்தார். என் தாயாரோ என்னையும் இழந்து விடக்கூடுமோ என்ற எண்ணம் மேலிட்டுக் கவலையிலாழ்ந்தார். என்னை வெகுவாகத் தடுத்துப் பார்த்தார். நானோ பிடிவாதமாக இருந்து என் வேலையை ராஜினாமா செய்து விட்ட செய்தியறிந்து மிகவும் புலம்பி அழுதார்.

எனக்காக மூன்று ஜாதிக்காய் பெட்டிகள் - கீல், பாட்லாக், பூட்டு, சாவி யுடன் - தயாராயின. ருக்மணி குக்கர் செட், மண்ணெண்ணை பிரஷர் ஸ்டோவ், சில பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள் ஒரு பெட்டியை ஆக்கிரமித்தன. மற்றொன்றில் என் உடைகள், போர்வை முதலியன. மூன்றாம் பெட்டியில் சாம்பார் ரசப்பொடிகள், வத்தல் வடகம் போன்ற உணவுப் பொருள்கள். என் அத்தை ஒரு நோட்டுப் புத்தகத்தில் சில சமையற் குறிப்புகள் எழுதித் தந்தார். ஒரு ஜமக்காளம் தலையணை, போர்வை யாவும் தயாராயின. என் நோக்கமெல்லாம் காந்தி ஆசிரமம் சென்று எப்படியாவது வேதாரணியம் கோஷ்டியில் சேர்ந்துவிட வேண்டு மென்பதுதான்.

ஏப்ரல் இருபதாந்தேதி, ராகியிடமிருந்து கடிதம் வந்தது. என் மன உறுதியைப் போற்றுவதாகவும், புறப்பட்டு வரலாமென்றும், ஆசிரமத்தில் சேர ராஜாஜி அனுமதி தந்திருப்பதாகவும், திருச்சி, ஈரோடு சந்திப்புகளில் ரயில் மாறி சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்கி, பஸ்ஸில் திருச்செங்கோடு வந்து விட்டல் ராவ் சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி அருந்தி அவரையே ஒத்தை மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஏற்பாடு செயது தரச் சொல்லி ஆசிரமம் வந்து சேரலாமென்று முழு விவரமெழுதி கடிதம் அனுப்பியிருந்தார்.

காந்தி ஆசிரமத்தில் ஆரம்பகால மேனேஜராக இருந்த ஸ்ரீ என். நாராயண அய்யர், BABL, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருந்த தமிழ் நாடு சர்க்கா சங்கத்தின் கதர் மந்திரத்தின் மேனேஜராக இருந்தார். அவரை அணுகி காந்தி ஆசிரமத்தைப் பற்றி விசாரித்து நான் அங்கு சேரவிருப்பதைத் தெரிவித்தேன். அவர் ஒரேயடியாக என்னை அதைரியப்படுத்தும் வகையில் 'அடப்பாவி! இந்தச் சின்ன வயதில் அங்கு செல்ல உனக்கு எப்படியடா புத்தி வந்தது? அங்கு பனை மரங்களெல்லாம் மழையில்லாமல் பட்டுப் போய் விழுகின்றன. அங்கு குடிப்ப தற்குக் கூடத் தண்ணீர் கிடைக்காது. தாமிரவருணி நதிக்கரையில் பிறந்து அதன் தண்ணீரைக் குடித்து 21 ஆண்டுகள் வாழ்ந்த நீ அங்கு போனால் சீக்கிரமே செத்துப்போவாய்' என்றெல்லாம் ஏதேதோ அதைரிய வார்த்தைகள் சொன்னார்.

இருபத்தியிரண்டாம் தேதி காலை புறப்படலாமென ஏற்பாடாயிற்று. 21ம் தேதி இரவு உள்ளூர் பஜனை மடத்தில் எனக்குப் பிரிவுபசாரமாக விசேஷ பஜனையும், விசேஷ பிரஸாதங்களும், (ஒரு விருந்து போல) வழங்கப்பட்டன. 22ம் தேதி காலை 6 மணிக்குப் புறப்படும் பஸ்ஸில் உள்ளூர்ப்பிரமுகர்கள் சிலரும், பால வேலையில் பணி செய்யும் கூலியாட்களும் வந்து விடை கொடுத்தனுப்பினார்கள். என் விதவைத் தாயாரை நமஸ்கரித்த போது அவர் 'ஓ'வென்று வாய் விட்டுக் கதறியழுதார். ஒருவாறு விடை கொடுத்தார்.

கோவில்பட்டியில் ரயிலேறி முறையே திருச்சி ஈரோடு சந்திப்புகளில் ரயில் மாறி சங்கரி துர்க்கத்தில் இறங்கி திருச்செங்கோட்டில் ஒற்றை மாட்டு வண்டி பிடித்து சாமான்களுடன் 23ந் தேதி பகல் 11 மணியளவில் காந்தி ஆசிரமம் வந்து சேர்ந்தேன். எனக்கு அப்போது வயது 21 1/2. முந்தின தினம் இரவெல்லாம் ரயிலில் கண் விழிக்க நேர்ந்ததால், மாட்டு வண்டியில் நன்றாகத் தூங்கிக் கொண்டே வந்தேன். கரடு முரடான ரோடு. ஆடி அசைந்து கொண்டே வந்தது. 7 மைல் தூரத்தை சுமார் மூன்று மணி நேரத்தில் கடந்தது. அவ்வப் போது கண்விழித்துப் பார்த்தால் எங்கோ வனாந்திரத்தில் செல்வது போல் இருந்தது. காந்தி ஆசிரம ஆரம்ப கால மேனேஜராக இருந்த ஸ்ரீ என். நாராயண அய்யர் சொன்ன வார்த்தைகள் உண்மைதான் என்று தோன்றியது. ஆயினும் ஒரு ஸ்தாபனமே அங்கு இயங்கி வரும்போது, அங்கு ராஜாஜியவர்களே பல தொண் டர்களுடன் தங்கியிருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

பகல் 11 மணியளவில் வண்டி காந்தி ஆசிரம்ம் காம்பவுண்டிற்குள் சென்று முன்வாசல் பகுதியில் நின்றது. வண்டியிலிருந்து கீழே இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன். நான்கு புறமும் சுற்றுச் சுவர் இல்லாமல் மேலே மட்டும் கூரை வேய்ந்த ஒரு அமைப்பில் ஒருவர் தன் முன் உட்கார்ந்திருந்த 7, 8 ஆண் பெண் குழந்தைகளுக்கு ஏதோ பாடம் சொல்லும் முறையில் கல்லூரி விரிவுரையாளர் போல பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவரை அணுகி என்னை அறி முகப்படுத்திக் கொண்டு ராகி அவர்கள் எழுதி வரச் சொன்னதின் பேரில் வந்த தாகத் தெரிவித்தேன். ராகி இரண்டு தினங்களுக்கு முன் மாயவரம் திருத்துறைப் பூண்டி முதலிய இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் மறு நாளோ அதற்கு அடுத்த நாளோ வந்து விடுவாரென்றும், அது வரை தன் ரூமில் தங்கலாமென்றும், தன் ரூமைக் காட்டினார். சாமான்களையெல்லாம் அவர் ரூமில் வைத்தேன். அவர் தன் பெயர் ஏ.கே. ஸ்ரீனிவாஸன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
(14 09 1984) தன் வேலையை முடித்துக்கொண்டு ஸ்ரீனிவாஸன் ரூமுக்கு வந்தார். 'சாப்பிடலாமா?' என்றார். 'நான் குளிக்க வேண்டுமே!' என்றேன். தலை யைச் சொறிந்தார் நண்பர். பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'முனுசாமி' என்று குரல் கொடுத்தார். ஒருவர் வந்தார். 'ஏன் முனுசாமி, எல்லைக் கிணற்றிலே ஏத்தக் குழியிலே தண்ணீர் இருக்குமா? இவர் புதிதாக வந்திருக்கி றார். ஒரு குவளையை எடுத்துக் கொண்டு இவருடன் சென்று வருகிறாயா?' என்றார். நான் முனுசாமி என்பவருடன் புறப்பட்டேன். ஒரு ஃபர்லாங் தூரம் நடந்து சென்று அங்கு ஒரு கிணற்றைக் காட்டினார். சுமார் இருபதடிக்கு இருபதடி சதுரமான நாற்பதடி ஆழமான ஒரு கிணற்றைக் காட்டினார். ஒழுங்காகப் படிகளில்லை. எட்டிப் பார்த்தேன். அடியில் சிறிது நீர் இருப்பது தெரிந்தது. இம்மாதிரிக் கிணறுகளை நான் எனது இருபத்திரண்டு வயது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. 'நீங்க இறங்கி தண்ணி வாத்துக்கிட்டு வாங்க. நான் இங்கே குந்திக்கிட்டு இருக்கேன்.' என்றார். நான் உயிரைப் பிடித்துக் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கிணற்றுக்குள் இறங்கினேன். 4’ X 4’ சதுரம் 2’ ஆழம் குழியில் சிறிது தண்ணீர் இருந்தது. குளிக்கும் தொட்டியில் உட்கார்ந்து குளிப்பது போல் கையில் கொண்டு போயிருந்த குவளையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் குளித்தேன். ஒருவாறு குளிப்பு நடந்தது. அங்கு குழியில் 12 மணி வெய்யிலிலும் வெளிச்சம் இல்லை. மீண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் சிரமப்பட்டு மேலே ஏறி வந்து பார்த்தால், உடம்பெல்லாம் - இரவில் நக்ஷத்தி ரங்கள் மின்னுவது போல் - சிறு சிறு துளிகள் மினுமினுத்தன. அவை மைக்கா - அபரேக் - துகள்கள் என முனுசாமி சொன்னார். பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அப் பகுதிகளில் மைக்கா படிவங்கள் உண்டு என.

சில நாட் களுக்குப் பின்னர்தான் முனுசாமி அரிசன வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குடியானவர்கள் - கொங்கு வேளாள கவுண்டர்கள் - புழங்கும் கிணறுகளில் அரிசனங்கள் இறங்கக் கூடாதென்றும், அது காரணமாகத்தான் அவர் என்னுடன் அக்கிணற்றில் இறங்கவில்லை யென்றும், தெரிந்து கொண்டேன்.

இங்கொன்றை குறிப்பிட விரும்புகிறேன். என் 7, 8 வயதிலிருந்தே சாதி உயர்வு தாழ்வு கூடாதென்ற எண்ணம் எப்படியோ என மனதில் பதிந்திருந்தது. எப்போதாவது என் கையில் காலணா அரையணா கிடைத்தால் என் வீட்டா ருக்குத் தெரியாமல் பிள்ளைவாள் நடத்தி வந்த ஒரு கடையில் இரண்டு வடைகள் வாங்கித் தின்று அங்கேயே ஒரு டம்ளர் தண்ணீரும் வாங்கிக் குடித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவேன். என்னைப் பொருத்த வரையில் ஜாதிப் பாகுபாட்டை ஒழித்து விட்டதாக ஒரு மனத் திருப்தி ஏற்படும்.

மற்றொன்றையும் எழுத விரும்புகிறேன். நான் பிறந்ததும் 20 வயது வரை வாழ்ந்ததும் சன்னியாசிக் கிராமம் என்ற அக்கிரகாரத்தில். மிகுந்த வைதிக எண்ணங் கொண்ட பிராமணர்கள் (அய்யர், அய்யங்கார்கள்)தான் அந்த இரட் டை வரிசையான சுமார் அறுபது வீடுகளில் வாழ்ந்தார்கள். நாடார்கள், பள்ளர் கள், சக்கிலியர் போன்றவர்கள் அந்தத் தெரு வழியாக நடந்து போகக் கூடாது. இந்த இனத்தவர் யாவரும் பாடுபட்டு உழைத்து ஜீவனம் செய்பவர்கள். கண்ணியமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இந்தத் தெருவும் நெல்லை நகராட்சிக்கு உட்பட்டது. குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரை யோரமாக வசிப்பவர்கள். அக்கிரகார வீடுகளில் சாப்பிட்ட பின் வெளியே தூக்கியெறியும் எச்சில் இலைகளில் ஏதாவது மிச்சம் கிடைக்குமா என நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு எவ்வித அவமான உணர்ச்சியும் இல்லாது வாழ்ந்தவர்கள். இவர்கள் அக்கிரகாரத்துக்குள் வந்து போவதில் அந்தத் தெருக்காரர்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு முறை அந்தத் தெருவுக்கு ரோடு போட நகராட்சி ஏற்பாடு செய்தது. குறவர்கள் மற்றும் அந்தத் தெருவுக்குள் வரத் தகுதி பெற்றிருந்த இதர வகுப்பினரைக் கொண்டுதான் ரோடு போட வேண்டும் என்றும் வரத் தகாதவர்களைக் கொண்டு ரோடு கூடாதென்றும் தங்கள் ரோட்டுக்கு சரளைக்கல் போட வேண்டாமென்றும மூர்த்தண்யமாக மறுத்து விட்டார்கள். இது 1921 ஆம் ஆண்டில் நடந்தது. Modern Review என்ற ஆங்கிலப் பத்திரிகையில் (கல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது) The Holy Lunatics of Sannyasigramam - Tirunelveli do not want any civic amenities because of their caste bigotry என்று எழுதிற்று.

இன்று அப்படியா? பிராமணப் பெண்கள் பலர் அன்றைய தீண்டத் தகாத இனத்தவர் மனைவிகளாக உள்ளனர். அந்தத் தெரு வீட்டு மாடிகளில் இதர இனத்துப் பையன்கள் வாடகைக்குத் தங்கி கல்லூரிகளில் படிக்கின்றார்கள். எத்தனையோ சீர்திருத்த வாதிகள் அவ்வப்போது தோன்றி 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று வலியுறுத்தி வந்திருக்கி றார்கள். காந்தி யடிகளின் அறிவுரைகளால் அகில இந்திய ரீதியிலும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் தமிழகத்திலும், மற்றும் மத்திய மாநில சட்டங்களாலும் சாதி ஏற்றத் தாழ்வு வெளித் தோற்றத்தில் வெகுவாகக் குறைந்துதான் காணப்படுகிறது. ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace.

(15 09 1984) ஆசிரம எல்லைக் கிணற்றிலே குளித்து வந்த பின் சாப்பிட உட்கார்ந்தோம். ரசம் - சாதம் - மோர் இவ்வளவே. நான் என் 19 வது வயதில் பம்பாய் செல்லும் வரை நான் வாழ்ந்த வீட்டில் ஒரே குடும்பமாக வாழந்து வந்தோம். சுமார் 30, 35 பேர்கள் ஏக குடும்பமாக இருந்தோம். என் தாய் வழிப்பாட்டி காலை 4 மணிக்கு எழுந்து குளித்து பூஜை செய்து அடுப்பு பற்ற வைத்தால் அன்று இரவு 11 மணியளவில்தான் அடுப்பு அணைக்கப்படும். 15 பேர்களாவது பெண்கள் பல்வேறு வயதுகளில் இருப்பார்கள். தினமும் யாராவது ஓரிரு உறவினர், ஆபீஸ், பள்ளிக்கூடம், கோர்ட்டு என்ற எதோவொரு காரணத் திற்காக விருந்தினராக வந்து கொண்டிருப்பார்கள். 1927 ஆம் வருடம் நான் பம்பாய் செல்லும் வரை ஓட்டலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்ட தில்லை. 1920 -21 ஓராண்டு மட்டும் நாமக்கல்லில் மூன்றாம் பாரத்தில் படித் தேன். என் தாயார் மட்டுமே இருந்ததாலும் என் சகோதரர் கேம்ப்பில் போய் விடுவா ராதலாலும் என் தாயாரின் மாதாந்திர மூன்று நாட்கள் லீவின் போது மட்டும் பாலப்பட்டி சீனிவாசய்யர் ஓட்டலில் சாப்பிடுவேன். ஆனால் அதை ஓட்டல் என்று சொல்வதை விட மற்றொரு வீடு என்றே சொல்ல வேண்டும். காலையில் பழைய சாதம். பிற்பகலில் மட்டும் சுடுசாதம், குழம்பு, ரசம், ஒரு கறி, மோருடன் சாப்பாடு. இரவு ஆறின சாதம், மோர், எரிகுழம்பு. ஆக எனக்குச் சமையல் என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடையாது. வாய்க்கு ருசியாக சாப்பாடு பக்ஷணங்கள் வேண்டிய போது கிடைத்து வந்தது.

நண்பர் ஸ்ரீனிவாஸன், வெந்தய ரசம் வைத்திருப்பதாகச் சொன்னார். அதில் சாதத்தைப் பிசைந்து ஒரு வாய் சோற்றை வாயில் போட்டேன். ஒரே கசப்பு. நண்பர் துவரம் பருப்புக்குப் பதிலாக வெந்தயத்தை ஒரு டம்ளர் போட்டு புளியைக் கரைத்து விட்டு உப்புக்காரம் போட்டு வெந்தயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைத்திருந்தார். அந்த ரசம் சாப்பிட்டதும் ஆசிரம வாழ்க்கை இது போலக் கசப்பாகத் தானிருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் தயிரை - கட்டித் தயிரை - அப்படியே தண்ணீர் விடாமல் சிலுப்பி வைத்திருந்த அருமையான வெண்ணையுடன் கூடிய மோர், ஆசிரம வாழ்க்கை நான் பயப்படக் கூடியதாக இருக்காது என்று எண்ண இடமளித்தது. ஒருவாறு சாப்பிட்டு முடித்து சிறிது நேரத்தில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். என் நண்பர் 2 மணியிலிருந்து 4 மணி வரை மீண்டும் பள்ளி நடத்தி விட்டு வந்தார். ஆசிரமத்தில் எல்லோரும் ஆறு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்களென்றும், ஆறரை மணிக்கு மாலைப் பிரார்த்தனைக்குத் தயாராக வேண்டுமென்றும், நண்பர் சொன்னதின் பேரில், என் பெட்டிகளைத் திறந்து சமையல் பாத்திரம் பண்டங்களை சீர்படுத்தி வைத்து நான் கொண்டு வந்திருந்த புத்தகக் குறிப்புப்படி குக்கரில் சாதம் பருப்பு செய்து, வற்றல் குழம்பு வைத்து சிறிதளவு வடகம் வறுத்தேன். என் நண்பரும் உதவி செய்தார் - சமையலில் மட்டுமல்ல, சாப்பாட்டிலும் கூட.

மணி ஓசை கேட்டது. “பிரார்த்தனைக்கு முதல் மணி அடித்தாயிற்று; போவோம்.” என்றார் நண்பர். நன்றாக இருட்டி விட்டது. ஒவ்வொருவரும் ஒரு அரிக்கேன் லைட்டை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர். லைட்டை மிகச் சிறிய வெளிச்சத்திற்குக் குறைத்து கைப்பிடிச்சுவருக்கு வெளியே வைத்து விட்டு அமைதியாக அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள். சில பெண்மணிகளும் வந்தார்கள். இரண்டாவது மணி அடிக்கப்பட்டது. எல்லோரும் நிசப்தமாக இருந் தார்கள். கீதை சுலோகங்கள் எல்லோரும் சேர்ந்து சொன்னார்கள். அதன் பிறகு ஓரிரு தமிழ்ப் பாடல்கள். கடைசியாக நாமாவளிகள் ஒன்றிரண்டு, சுமார் பதினைந்து இருபது நிமிடங்கள் நடந்த பின் அவரவர்கள் கலைந்து செல்ல ஆயத்த மானார்கள். நண்பர் ஸ்ரீனிவாஸன், 'ஒரு நிமிடம் இருங்கள். புதிதாக ஒரு நண்பர் வந்திருக்கிறார்; அவரை நாம் தெரிந்து கொள்வோம்.' என்றார். எல்லோரும் தங்கள் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தைப் பெரிதாக்கி, உட்கார்ந்தார்கள். பல விளக்குகளின் வெளிச்சம் அதிகமாக எனக்குப் பட்டது.
நண்பர் முதலில் ஒருவரைக் காட்டி, “ஸ்ரீ என். கே ஸ்ரீனிவாசராகவன் - இப்போது இவர்தான் ஆசிரம மேனேஜர்.” என்று சொல்லி என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரமத்தின் ஆரம்ப கால ஊழியர்கள் பலருடன் ராஜாஜியவர்கள் வேதாரணியம் பாத யாத்திரையில் இருந்தார். மேனேஜர் கே. சந்தானமும் யாத்திரையில் சென்றிருந்தார். ஆசிரம அலுவல்கள் தொடர்ந்து நடைபெறுவதற்காக குறைந்த அளவான ஊழியர்கள் மட்டுமே ஆசிரம வேலை களைக் கவனித்து வந்தார்கள். அவர்கள் என்னைப் பல கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்று மகிழ்ந்தனர். நான் சென்ற ஆறு மாதமாக ராகி ஒருவருடன் மட்டுமே தொடர்பு கொண்ணடிருந்து அவர் அழைப்பின் பேரில் ஆசிரமம் வந்து சேர்ந்திருந்தேன்.

(19 09 1984) ஆதலின், முறையாக ஆசிரம மேனேஜருக்கு விண்ணப்பம் அனுப்பி அவர் அனுமதியுடன் வந்து சேரவில்லை. திரு என். கே ஸ்ரீனிவாச ராகவனும் நான் வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்னர்தான் ஆசிரம நிர்வாகி யாகப் பொறுப்பேற்றிருந்தார். எனக்கு 22 வயது. அவர் என்னை விட 4, 5 வயதுதான் மூத்தவர். ஆசிரம நிர்வாகத்திற்குப் புதியவர். ராஜாஜியுடன் ஆசிரம மூத்த ஊழியர்கள் பலரும் வேதாரணியம் யாத்திரையில் சென்று விட்டதால் ஸ்ரீனிவாசராகவனுக்கு ஆசிரம கொள்கைகள் முழுவதுமாகப் பிடிபடவில்லை. ஆகவே அவர் துவக்கத்தில் ஒருவித அலட்சியப் போக்குடன் நடத்தியதாக உணர்ந்தேன். ஆனால் சில வாரங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொண்டு மிகுந்த நட்புறவு கொண்டோம்.

 நான் ரா.கி.யின் வ‌ருகைக்காகக் காத்திருந்தேன். அவர் நான் ஆசிரமம் வந்தடைந்த தினத்திற்கு மறுநாள் மாலை தான் வந்தார். ஆசிரமத்திற்கு நான் வந்து சேர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்தார். அவர் தஞ்சை மாவட்டக்காரர் ஆதலின், ராஜாஜியின் வேதாரணியம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை அவ்வப்போது சென்று கவனித்து வந்தார். இரண்டு தினங்கள் எனக்கு அவர் வீட்டில் சாப்பாடு. அவர், விமோசனம் என்ற தமிழ் மாதப் பத்திரிகை, Prohibition என்ற ஆங்கில மூன்று மாதமொரு முறை பத்திரிகை, ஆகியவற்றில் ராஜாஜிக்கு உதவியாக இருந்து வந்தார். ஆகவே அவர் என்னைத் தன் உதவியாளனாகச் சேர்த்துக் கொண்டார். நான் திருமணமாகாதவன் ஆதலால் ஆசிரமத்தின் வழக்கப்படி மாதம் எனக்கு ஊதியம் இருபது ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

(20 09 1984) 'தண்டி' யாத்திரை வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது. பல பேர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். பலரை தடியடிப் பிரயோகம் செய்து கலைத்தார்கள். ஆயினும் அவர்கள் மீண்டும் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்து சிறை புகுந்தனர். தேசம் முழுவதும் இயக்கம் வலுவடைந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறை புகுந்தனர். பொறுக்கு மணிகளான நூறு தொண்டர்களுடன் திருச்சியில் 1930 சித்திரை தமிழ் வருடப் பிறப்பன்று (14 01 1930) பாதயாத்திரை புறப்பட்ட ராஜாஜி சுமார் 150 மைல் கள் நடந்து 28ந்தேதி வேதாரணியம் சென்றடைந்தார். 29ந்தேதி எந்த வித இன்னல்களுக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது என்ற பிரதிக்ஞை எடுத்துக் கொண்டதோடு மறுநாள் உப்பு எடுப்பது என்று தீர்மானித்தார்கள். முப்பதாந்தேதி காலை 5 மணிக்கு ராஜாஜி, அகஸ்தியம்பள்ளி என்ற இடத்திற்கு சென்று 'மகாத்மா காந்திஜிக்கு ஜே! வந்தே மாதரம்!' என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்ப, ஒரு கைப்பிடி உப்பு அள்ளினார். காவல் துறையினர் ராஜாஜி வரக்கூடும் என்று அவர்கள் அனுமானித்திருந்த இடத்தில் தயாராகக் காத்திருந்தனர். ஆனால் ராஜாஜி அகஸ்தியம்பள்ளியில் உப்பு எடுத்து விட்டதையறிந்து ஏமாந்து போனதால், கோபமடைந்தனர். ராஜாஜியை அன்றே விசாரித்து தண்டனையளித்து சிறைக்கு அனுப்பினர். அதன் பின்னர் நூறு தொண்டர்களும் தனித் தனியாகவும் சிறு சிறு கூட்டங்களாகவும் உப்பு அள்ளினர்.

(23 09 1984) தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறைக ளுக்கு அனுப்பப்பட்டனர். பலரை காவல் துறையினர் புளியன்விளாறு கொண்டு கண்மூடித்தனமாக அடித்தனர். அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்து ஜனங்கள் பலரும் இந்தக் கொடுமைகளைப் பார்த்துத் தாங்களும் உப்பெடுத்து சத்தியாக் கிரகம் செய்து சிறை சென்றனர்.

ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று ஆங்காங்கே இயக்கம் வலுப்பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆதலால் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று திரும்புவார். அவருக்கு உதவியாளனாக நான், விமோசனம், Prohibition பத்திரிகைகள் விஷயமாக வரும் கடிதங்களைப்பார்த்து, அவற்றில் செய்ய வேண்டியவைகளைக் கவனித்து வந்தேன். விமோசனம் மே (1980) பத்திரிகைகளையும், எப்ரல் மாத Prohibition பத்திரிகைகளையும், அனுப்பவேண்டிய முகவரிகளுக்கு அனுப்பி வைப்பதில் எனக்கு முழு நேர வேலை இருந்தது. ராஜாஜி (விமோசனம் ஆசிரியர்) சிறை சென்று விட்டதால், பத்து மாதங்கள் மட்டுமே வெளிவந்த விமோசனம் நிறுத்தப்பட்டது. ஜூன், செப்டம்பர் மாதங்களில் வெளிவரவேண்டிய Prohibition பத்திரிகைக்கான matter ஏற்கனவே அச்சுக்கு அனுப்பப்பட்டதால் அந்த இரண்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.

ரா.கி, “சுயராஜ்யம் ஏன்?” “அன்னிய ஆட்சி வேண்டாம்!” “நாணய மாற்று விகிதம்” என்ற பல தலைப்புகளில் கட்டுரை எழுதி அவற்றைக் காலணா பிரசுரங்களாக வெளிவர ஏற்பாடு செய்தார். திருச்செங்கோடு சேலம் பகுதிகளில் அச்சகங்கள் அச்சிட பயந்ததாலும், இதற்கான செலவுகளுக்காகப் பணம் திரட்டு வதில் சிரமம் இருந்ததாலும் இப்பிரசுரங்களை பங்களூரில் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கவனித்து ஆவன செய்ய என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
(24 09 1984) மே பத்தாந்தேதி வாக்கில் நான் பெங்களூர் மல்லேஸ்வரம் சேவாஸ்ரமம் போய்ச் சேர்ந்தேன். அதன் தலைவர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா என்பவர். அவருக்கு ரா.கி. கடிதம் கொடுத்திருந்ததுடன் நான் அங்கு வருவதைக் குறித்து அவருக்கு முன்பே கடிதமும் எழுதியிருந்தார்.

நான் அங்கு போய்ச் சேர்ந்த சமயம், பிரம்மச்சாரி ராமச்சந்திரா ஏதோ வேலையாக வெளியே சென்றி ருந்தார். அவருடன் சேவையில் இருந்த ஸ்ரீ ஆர் வி குர்ஜாலி என்னை வரவேற்று உபசரித்தார். மாலையில் ஸ்ரீ ராமச்சந்திரா வந்தார். முழங்காலுக்கு மேல் நாலு முழத் துண்டு கட்டியிருந்தார். மேலே ஒரு பனியன். அதற்கு மேல் ஒரு துண்டு. நல்ல சிவப்பு நிறம். சாதாரண தேக அமைப்பு. தொழிலாளர்களின் நல் வாழ்வுக்குப் பாடுபட்டு வந்தார். 'பிரம்மச்சாரி' என்ற ஆங்கில - தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். அவரை 'மைசூர் காந்தி' என்று அழைப்பார்கள். அன்றைய மைசூர் ராஜ குடும்பத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் இருந்தது. ராகி இவர் மூலமாகத்தான் காலணா பிரசுரங்களை அச்சடிக்க வைத்து, திருச்செங்கோட்டில் ஆசிரமத்துக்கு மளிகை சாமான்கள் விற்பனை செய்து வந்த திரு லக்ஷமணன் செட்டியார் கடைக்கு, 'பள்ளி நோட்டுப் புத்தகங்கள்' என்ற பெயரில் அனுப்பி வந்தார். அப்போ தெல்லாம் எட்டு பக்கங்கள் மட்டுமே அச்சடிக்கக் கூடிய இயந்திரங்கள் தான் இருந்தன. மக்கள் புஸ்தகா பிரஸ், காக்ஸ்டன் பிரஸ் என்ற இரண்டு அச்சகங்களில், எட்டெட்டு பக்கங்கள் வீதம் பதினாறு பக்கங்கள் அச்சடித்து, மூன்றாவது ஒரு பைண்டரிடம் தைத்து, அங்கேயே நூறு புத்தகங்களாகக் கட்டி, திருச்செங்கோட்டிற்கு 1000 புத்தகங்கள் அனுப்புவது வழக்கம். இதற்கான செலவுக்கான பணம் முழுவதும் ஸ்ரீ ராமச்சந்திரா பெங்களூரிலேயே வசூல் செய்து வந்தார். அவருக்கு உதவியாக இருக்க ரா.கி. என்னை அனுப்பி வைத்தார். ராமச்சந்திரா தமிழர்; பிராமணர். சுமார் ஒரு மாதம் வரை அவருக்கு உதவியாக நான் அங்கு இருந்து, இந்த பிரசுரங்கள் வெளியிடும் வேலையைக் கவனித்து வந்தேன்.

(25 09 1984) ராமச்சந்திராவை ராம்ஜி என்றே அங்கு எல்லோரும் அழைத்தார்கள். நானும் ராம்ஜி என்றே இனி குறிப்பிடுவேன். காலையில் ஐந்து மணிக்குத் துயிலெழுந்து, காலைக்கடன்கள் முடித்துக் குளித்து, ஐந்தரைக்குப் பிரார்த்தனை செய்து, ஒரு டம்ளர் கோதுமை கஞ்சி சாப்பிட்டு விட்டு, ஆறு அல்லது ஆறரை மணிக்கு சில அன்பர்களின் வீடுகளுக்குச் செல்வோம். ராம்ஜி யை மிக்க மரியாதையுடன் வரவேற்பார்கள். 'தேச சேவைக்கு கொஞ்சம் நிதி பெற வந்துள்ளேன்' என்பார் ராம்ஜி. வீட்டுச் சொந்தக்காரர் உள்ளே சென்று ரூபாய் பத்து பதினைந்து, இருபது இப்படி ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்து 'இது போதுமா, இன்னமும் என்னிடம் எதிர்பார்க்கிறீர்களா?' என்பார். 'இப்போதைக்கு இது போதும்; தேவைப்படும் போதெல்லாம் தங்களிடம்தானே நான் வந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி அத்தொகையையும் அவர்கள் தரும் மோர் அல்லது பால் சாப்பிட்டு விட்டு ஓரிரு ஃபர்லாங்குகள் நடந்து மற்றொரு அன்பர் வீட்டுக்குப் போவோம். அங்கும் இதே போல பணம் பெறுவோம். இதற்குள் எட்டு எட்டரை மணி ஆகி விடும். ' நீ வளரும் வாலிபன். உன்னைப் பட்டினி போடக் கூடாது. நீ ஏதாவது சாப்பிடு' என்று சொல்லி என்னைச் சிற்றுண்டி விடுதிக்கு அழைத்துச் சென்று, தோசை, இட்டிலி ஏதாவது சாப்பிடச் செய்வார். 9 மணி யளவில், கோட்டைப் பகுதியிலுள்ள சர்க்கா சங்க கதர் வஸ்திராலயத்திற்குப் போவோம். அப்போது வஸ்திராலய நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீ டி. சதாசிவம். பின்னாட்களில் கல்கி பத்திரிகை உரிமையாளர். ராம்ஜியும் சதாசிவமும் சேர்ந்துதான் ரா.கி. எழுதிய பிரசுரங்களை அச்சிட்டு அனுப்பவும், அதற்கான செலவுகளைச்சமாளிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தனர். ஆகவே அன்று காலை ராம்ஜி செய்த வசூலையும் மேலும் எவ்வளவு தேவைப்படும் என்பதையும் தீர்மானிப்பார்கள். பொருளாதார நிலையில் சற்று சௌகரியமான நிலையிலிருப்பவர்கள் பலரை இவர்கள் இருவரும் அறிந்திருந்ததாலும் இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் 'இல்லை'யென்னாது ஏதாவது கொடுத்துத்தான் அனுப்புவார்கள். ஆகவே இப்பிரசுரங்களை அச்சிடும் செலவுகளுக்கு சிரமம் இருக்கவில்லை. அச்சாபீசுகள் இரண்டில் ஒன்று கன்டோன்மென்ட் பகுதியிலும், மற்றொன்று பெங்களூர் நகர்ப் பகுதியில் இருந்த தாலும், 9 மணிக்கு வெய்யில் கடுமை ஏற்படுமாதலாலும், குதிரை வண்டியை ஏற்பாடு செய்வார். முதல் மணிக்கு ஒரு ரூபாய் என்றும், அடுத்த ஒவ்வொரு மணிக்கும் பத்தணா என்றும் பேசி வண்டியில் செல்வோம். எங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு 12, 12 30 மணியளவில் சேவாஸ்ரமம் வந்து சேருவோம்.

சிகப்பு நிறமுள்ள கொட்டை அரிசிச் சாதம், குழம்பு என்ற பேருக்கு ஒன்று, நல்லெண்ணை, மிக அதிக அளவில் நீர் கலந்த மோர் இவற்றை ஒருவாறு சாப்பிட்டு இருவரும் மூன்று மணி வரை ஓய்வெடுப்போம். பின்னர், மீண்டும் வெளியில் செல்வோம். எங்கள் வேலையை முடித்துக்கொண்டு, ஆறு, ஆறரை மணிக்குத் திரும்புவோம். மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு கோதுமை மாவு பரோட்டாவும், மதியம் செய்த குழம்பும், நீர் மோரும் சாப்பிட்டு 9 மணி யளவில் படுக்கச் செல்வோம். சில நாட்களில், அபூர்வமாக ஏதாவது காய்கறி களும் இருக்கும். சேவாஸ்ரமத்தில் சுமார் ஆறு பேர்கள் இருந்தார்கள். தமிழகத்தில் சத்தியாக்கிரக இயக்கம் மிக வேகமாகப் பரவி விட்டது. இயக்கத்தை தொடர்ந்து நடத்த நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். அவர்களுடன் பல தொண்டர்களும் சிறை சென்றனர். பெங்களூரில் ரகசியமாகப் பிரசுரங்கள் அச்சிடுவது அம்பலமாகிவிட்டது. ஆகவே அச்சகங்கள் அச்சிட அஞ்சின. மேலும் ரா.கி. அவர்கள் இயக்கத்தில் நேரிடைப் பங்கு வகிக்கத் துடித்துக கொண்டிருந்தார். பங்களூரிலிருந்து டி. சதாசிவமும் வஸ்திராலயப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு ராகியுடன் சேர்ந்து கொண்டார். ஆகவே பெங்களூர் பிரசுர வேலை நின்று விட்டதால், நான் காந்தி ஆசிரமம் திரும்பி னேன். ராகியும் சதாசிவமும் ஒரு கூட்டத்தில் பேசியதற்காகக் கோபிச் செட்டிப்பாளையத்தில் கைதாகி சிறை சென்று விட்டனர். எனக்கு 'விமோசனம்' தொடர்பான வேலை எதுவும் இருக்கவில்லை. ஆகவே ஆசிரம நிர்வாகி என்னை நூல் வாங்கும் கேந்திரங்களுக்கு அனுப்ப முடிவு செய்தார்.

(26 09 1984) நான் 1922 ஆம் ஆண்டிலிருந்து கதர் அணிபவனாயினும், பம்பாயில் கதர் விற்பனையில் சிறப்பாக ஈடுபட்டிருந்த போதிலும், கதர் நூற்பு நெசவு போன்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் கிராமத்து நூல் நூற்பவர்களிடமிருந்து நூலை வாங்கி, நூற்ற கூலி கொடுத்து, அவர்களுக்கு மேலும் நூற்பதற்கான பஞ்சு கொடுக்கவேண்டும். எனக்கு முன்னர் இரண்டு ஆண்டு காலமாக ஆசிரமப் பணியிலிருந்த திரு எம்.எஸ். அனந்தராமன், திரு ராமன் பிஷாரோடி போன்றவர்கள் ஏற்கனவே நூல் வாங்கும் வேலையைக் கவனித்து வந்தார்கள். அவர்களில் ஒருவருடன் நான் நூல் வாங்க கிராமங் களுக்குச் செல்வேன். அப்போது 1930ம் வருடம் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, ஏராளமான வயது முதிர்ந்த கிழவிகளும் நடுத்தர வயதுப் பெண்களும், இளம்பெண்களும், ஆயிரக்கணக்கானவர்கள், நூற்புத் தொழிலை மேற்கொண் டிருந்தார்கள். நூல் மையம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆயிரம் பேர்கள் நூல் கொண்டு வருவார்கள். அப்போதெல்லாம் கழிநூல்தான். 8 போன்ற மூங்கில் வீசணத்தில் நூற்ற நூலை மாறி மாறி வீசி கழிகளாக்கி சுமார் ஒன்றரை பவுண்டு கழிகளாக ஒவ்வொருவரும் மூன்று அல்லது நான்கு கழிகள் கொண்டு வருவார்கள். அதன் எடையைக் குறித்துக் கொண்டு ஒரு விரலால் தூக்கிப் பார்த்து முறுக்கு போதுமானதாக இருக்கிறதா எனப் பார்த்து அவர்களுக்கு கூலி கொடுத்து, பஞ்சு எடை போட்டு வழங்க வேண்டும்.

(28 09 1984) நான் ராட்டையையோ நெசவு செய்யும் தறியையோ பார்த்தது இல்லை. ஆசிரமம் வந்து சேர்ந்த பின், சாதாரண கிராமத்துப் பாட்டி ராட்டையில் நூற்கப் பழகிக் கொண்டேன். 5, 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கிசான் ராட்டை, பெட்டி ராட்டைகள் பழக்கத்திற்கு வந்தன. நான் 1921 , 22 ஆம் ஆண்டில் தான் கதர் அணிய ஆரம்பித்தேன். நாலாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஒத்துழையாமை சத்யாக்கிரக இயக்கத்தில் காந்திஜி கைதான 18ம் தேதி ஒவ்வொரு மாதமும் காந்திய பஜனை நடந்து வந்ததில் நானும் கலந்து கொண்டேன். பலரும் முரட்டு பழுப்பு நிறத் துணி அணிந்திருந்தனர். அது கதர் என்றும் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கதர் பண்டார்களில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். 36” அகலம், 3 1/2 முழம் நீளம் உள்ள ஒரு கதர் துண்டின் விலை ரூ 1 3/4 ஆக இருந்தது. என் வீட்டுக்குப் பக்கத்திலேயே கதர் பண்டார் இருந்தது. பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் நெய்யும் துண்டு ஒன்றின் விலை 8 அணாவாக இருந்தது. ஆகவே என் பெற்றோர்கள் விலை அதிகமான கதர்த் துண்டு வாங்கித் தர மறுத்தார்கள். ஆயினும் நான் அடம் பிடித்து கதர் துண்டு வாங்கியணிந்தேன். ஆகவே என் நண்பர்கள் என்னை 'காந்தி கிச்சன்' என்று அழைத்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான், மில் முரட்டு நூல் கலந்த துணிதான் கதர் என்ற பேரில் விற்கப் படுவதையும் அறிந்தேன். காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்திலிருந்து “தமிழ் நாடு கதர் போர்டு” என்ற அமைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் “அகில பாரத சர்க்கா சங்கம் - அதன் அத்தாட்சி பெற்ற கதர் ஸ்தாபனங்கள்” தோன்றி கதரின் தூய தன்மையை அமல் படுத்தலாயின. ஆயினும் காந்திஜி கதர் இயக்கத்துக்குப்புத்துயிர் கொடுத்த நாளி லிருந்தே போலி கதரும், சூரியனும் - இருட்டும் போல, உண்மையும் - பொய்யும் போல பிறந்து விட்டது. அது நிற்க. நான் காந்தி ஆசிரமத்தில் பல நூல் வாங்கும் கிராமங்களுக்குச் சென்று நூல் வாங்கும் பணியில் இருந்து வந்தேன். நான் காந்தி ஆசிரமத்திற்கு வந்ததின் நோக்கமே வேதாரணியம் கோஷ்டியில் சேர்ந்து கைதாகி சிறை செல்ல வேண்டுமென்பதுதான். ஆனால் என்னை ஆசிர மத்திற்கு வரச்சொன்ன ராகி அவர்களும் சிறை சென்று விட்டார். ஆகவே நான் ஆசிரம சேவையை விட்டு சிறை செல்ல விரும்பினேன்.

ராகி சிறை செல்லு முன், மதுரை சௌராஷ்ட்ரப் பிரமுகர், ஸ்ரீ எம்.கே. சுந்தர்ராமய்யரிடம் என்னைப் பற்றிச் சொல்லி, என் ஆசிரம விலாஸத்தையும் அவரிடம் கொடுத் திருந்தார். ஆகவே உடனே புறப்பட்டு வருமாறு கடிதம் வந்தது. இதற்கு முன்னரே நான் திருச்சி சென்று டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் வீட்டில் நடந்த முகாமுக்குச் சென்றேன். ஆசிரமத்தில் இருந்த ராமன் பிஷாரோடி கல்லூரி யொன்றின் மாணவர்களைக் கல்லூரி செல்ல வேண்டா மென்று கேட்டுக் கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றிருந்தார். மறுநாள் சில தொண்டர்களுடன் நான் செல்வதாக இருந்தது. ஆசிரமத்தில் இருந்து அன்று மாலை திருச்சி வந்த நண்பர், சுந்தர்ராமய்யர் கடிதத்தைக் கொடுத்தார். அங்கிருந்த தொண்டர்கள் என்னை மதுரை செல்லு மாறு கூறினார்கள். மறுநாள் மதுரை சென்றேன். தமிழகத்தில் சத்தியாக்கிரக இயக்கம், நான்கு மாத்ததிற்கு மேலாக தீவிரமாக நடந்தது. அதுவரை மாவட்ட வாரியாக எத்தனை பேர் சிறை சென்றுள்ளார்கள் என்ற Roll of Honour தயாரிக்க வேண்டுமென அகில இந்திய காங்கிரஸின் வழிகாட்டுதலின்படி தயாரிக்க எம்.கே.எஸ். விரும்பினார்.
ஆகவே ஒரு டாக்சியைப் பிடித்துக் கொண்டு நெல்லை மாவட்டத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டமாக உள்ள கதர் வஸ்திராலயங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தெரிந்தபடியான லிஸ்டு தயாரித்துக் கொண்டு 3, 4 தினங்கள் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம். செங்கற்பட்டு மாவட்டம் வாலாஜாவில் திரு சுந்தரவரதன் என்ற தேசபக்தர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். சென்னையில் தம்பு செட்டி அல்லது லிங்கி செட்டித் தெருவிலோ Free Press of India சென்னை காரியாலயம். அதன் மேனேஜரிடம் என்னையும் சுந்தரவரதனையும் ஒப்படைத்தார் ஸ்ரீ எம்.கே.எஸ். அங்கிருந்த ஆங்கில, தமிழ் தினசரிகளிலிருந்து மார்ச் 1ந்தேதி முதல் செப்டம்பர் 30ந்தேதி வரை வெளி வந்த செய்திகளிலிருந்து எந்தெந்த மாவட்டங்களில் என்றென்று, யார் - யார், எத்தனை பேர்கள், என்ற லிஸ்டு தயாரிக்க ஏற்பாடு செய்து விட்டு, மீண்டும் பத்து தினங்களில் வருவதாகச் சொல்லி போதுமான பணமும் கொடுத்து விட்டுச் சென்றார். நாங்கள் மேல்மாடியிலிருந்து கீழே இறங்கி சாப்பாட்டிற்குச் சென்று திரும்பும் போதெல்லாம் யூனிபார்ம் போடாத போலீசார் நாளும் கண்காணித்து வருவதை உணர்ந்தோம். நாங்கள் எங்கள் வேலையைக் கவனமாகச் செய்து வந்தோம்.

(29 09 1984) மதுரையிலிருந்து ஸ்ரீ எம்.கே.எஸ்., செப்டம்பர் இருபதாந்தேதி வந்தார். நாங்கள் செயதுள்ள வேலைகளைப் பார்வையிட்ட பின், மாலையில் எங்களை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அன்று காலையில்தான் ராஜாஜி ஆறு மாத சிறைவாசம் அனுபவித்து விட்டு, வெளியே வந்திருந்தார் போலும். அவரிடம் நடந்துள்ள வேலைகளையும், இனி நடக்க வேண்டிய வேலைகள் பற்றியும் விளக்கினார். நாங்கள், சுமார் 3000 பேர்கள் வரை தமிழகத்தில் சிறை சென்றுள்ளதாகவும், மாவட்ட வாரியாக லிஸ்டு தயாரித்து வருவதாகவும், சொன்னோம். என்னை காந்தி ஆசிரமத்திலிருந்து வந்திருப்பதாக ஸ்ரீ எம்.கே.எஸ்., ராஜாஜியிடம் சொன்னார்.

நான் அப்போது தான் ராஜாஜியுடன் முதல் முதல் அறிமுகம் ஆனேன். இரண்டு தடவைகள் பம்பாயிலும், ஒரு தடவை நெல்லையிலும், பொதுக்கூட்டங்களில் எட்ட நின்று பார்த்திருக்கின்றேன். எம்.கே.எஸ். அறிமுகம் செய்தபோது அவர் கறுப்புக் கண்ணாடி வழியாக என்னை ஏற இறங்கப் பார்த்தார். பெயர் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.’கிருஷ்ணமூர்த்தி சொன்ன பையனா' என்று கேட்டுத் தெரிந்து கொண்டு “செப்டம்பர் மாத Prohibition அச்சாபீசிலிருந்து வந்து Despatch ஆகிவிட்டதா?” என்று கேட்டார். நான் சுமார் ஒரு மாதமாக ஆசிரமத்திலிருந்து வெளியே இருப்பதாகவும், ஆதலால் விவரம் தெரியவில்லை என்றும் தெரிவித்தேன். உடனே ராஜாஜி, எம்.கே.எஸ்.ஸைப் பார்த்து 'இவரை, இன்று இரவு ரயிலிலேயே டிக்கட் வாங்கிக் கொடுத்து ஆசிரமத்துக்கு அனுப் புங்கள்.'என்று சொல்லி என்னிடம் Prohibition பத்திரிகை வந்திருந்தால் அதை உடனே சந்தாதாரர்களுக்கு - முதலில் வெளிநாட்டு சந்தாதாரர்களுக்கு அனுப்பும் படியும், தான் இன்னும் ஓரிரு வாரத்தில் அங்கு வரும் வரை ஆசிரமத்திலேயே இருக்கும் படியும் என்னைப் பணித்தார். அவர் உத்திரவையேற்று இரவு ரயிலேறி மறுநாட் காலை காந்தி ஆசிரமம் வந்து சேர்ந்தேன். Prohibition அச்சாகி வந் திருந்தது. சுமார் 600, 700 சந்தாதாரர்களுக்கு விலாஸங்கள் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி 2, 3 தினங்களிலே அந்த வேலையை முடித்தேன்.

ஆசிரமத்திலேயே தங்கி யிருந்து மேனேஜர் இட்ட வேலைகளைச் செய்து வந்தேன். ராஜாஜியவர்கள், 28ந் தேதி ஆசிரமம் வருவதாகவும் திருச்செங்கோட்டுக்கு வண்டியனுப்பும்படியும் கடிதம் வந்திருந்தது. அதன்படி ராஜாஜி பகல் பத்தரை மணி சுமாருக்கு வந்து சேர்ந்தார். ராஜாஜியின் தமையனார் ஸ்ரீ ஸ்ரீனிவாசய்யங்கார் (Retired Revenue Official) Dr.P.சுப்பராயன் எஸ்டேட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவர் இல்லத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருந்தார். அவர் புதல்வன் சி ஆர் நரசிம்ம னும், புதல்வி லக்ஷ்மியும், அவர் வந்தபோது ஆசிரமத்திலிருந்து தங்கள் அத்தைப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்ததாக நினைவு. அவர்கள் அது சமயம் ஆசிரமத்தில் இல்லையென்பதாக நினைவு. ராஜாஜி அக்டோபர் 2ம் தேதியும் ஆசிரமத்தில் இருந்தார். அப்போதெல்லாம் காந்தி ஜெயந்தி நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி அமைதி யாகக் கொண்டாடப்பட்டது. இரண்டொரு தினங்களுக்குப் பின் ராஜாஜி சென்னை திரும்பி விட்டார். ராஜாஜி ஆசிரமத்தில் தங்கியிருந்த 4, 5 தினங்க ளிலே அந்த வறட்சிப் பிரதேசத்தில் பெருமழை பெய்து ஏரி, குளம், குட்டைகள், கிணறுகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. வாய்க்கால்களில் நீர் ஓட ஆரம்பித்தது. அந்தப் பக்கத்துக் குடியானவர்கள் எல்லாம், 'பெரிய அய்யா வந்தார்கள்; பெரு மழை பெய்தது. - அவர் ரிஷ்ய சிருங்கரல்லவா?' என்று பெருமை கொண்டு ராஜாஜியைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

இந்த வேளையில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பெங்களூர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா அவர்கள் தேசவிடுதலை சத்தியாக்கிரகம் நடை பெறப் பொருள் சேர்த்து வந்தார். சுமார் ரூ. 400 உடன் ஒரு சத்தியாக்கிரக முகாமுக்கு ரயிலேறிச் சென்றபோது அவர் பை கிழிக்கப்பட்டுப் பணம் பறி போய் விட்டது. இது விஷயம் கேட்ட ராஜாஜி, பணத்தில் இப்படி அஜாக்கிர தையாக இருக்கக்கூடாது என்று ஆசிரம ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது சேலம் நகரத்தில்தான் Imperial Bank of India என்ற அரசாங்க வங்கியும் மற்றும் சில Scheduled வங்கிகளும் மட்டுமே இருந்தன. ஆசிரமத்தின் வாராந்திரத் தேவை சுமார் ரூ. 10000 வரை ஆகும். இந்தப் பணத்தை வாரந்தோறும் காலணா, அரையணா, ஒரு அணா, கால் ரூபாய், அரை ரூபாய் நாணயங்க ளாகவும், ஒரு ரூபாய், ஐந்து, பத்து ரூபாய் நோட்டுக்களாகவும், ரூபாய் பத்தா யிரத்திற்கும், பெற்று வர வேண்டும். காலையிலேயே வண்டியைக் கட்டிக் கொண்டு, திருச்செங்கோடு வந்து, வண்டியை ஸ்ரீனிவாசய்யங்கார் வீட்டு முன் விட்டு, அவர் வீட்டு வேலைக்காரரிடம் ஒப்படைத்து, ஆசிரம ஊழியர் ஒருவர் வண்டிக்காரருடன் சேலம் சென்று பணம் பெற்று, பஸ் ஏறி, திருச்செங்கோடு வந்து, ஆசிரமம் வரவேண்டும். அநேகமாக இருட்டுக்கு முன், ஆசிரமம் வந்து சேர வேண்டும். சில நாட்களில் இரவு பத்து மணி வரை கூட ஆக விடும். ஆகவே அது பெரிய Risky விஷயம். ராஜாஜியவர்கள்,இதை மனத்தில் வைத்துக் கொண்டும் ஆசிரம ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மற்றொரு சந்தர்ப்பத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவருடைய ஜிப்பாவின் பை கத்தரிக்கப்பட்டு ரூ 400 வரை பிக் பாக்கெட் அடிக்கப்பட்டு விட்டது. உடனே ரட்டன் பஜார் கதர் வஸ்திராலயத்திற்கு தகவல் அனுப்பி பயணம் தடை படாமல் நடந்தது. ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா?

அக்டோபர் நவம்பர் தீபாவளி மாதம். ஆதலால் என்னை ஆசிரமம் மேனேஜர் சிறை செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டார். தீபாவளிக்கு சரக்குகள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அக்டோபர் கடைசியில் 'அம்மாவுக்கு உடல்நிலை ஆபத்தாக உள்ளது. உடனே புறப்பட்டு வரவும்.' என்று தந்தி வந்தது. உடனே வண்டியில் திருச்செங்கோடு சென்று “புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன்' என்று தந்தி கொடுத்துவிட்டு சங்கரிக்கு பஸ்ஸில் சென்று ரயிலில் ஈரோட்டை அடைந்தேன். ஈரோடு - திருச்சி ரயில் பிரிவில் பாலம் உடைப்பு என்றும், கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் வழியாகத்தான் ரயிலில் செல்ல முடியுமெனத் தெரிந்தது. கோவைக்கு ரயில் ஏறினேன். இரவெல்லாம் ரயில் சந்திப்புகளில் ரயில் மாறி, காலை எட்டு மணிக்கு கோயில் பட்டி சேர்ந்து, பஸ் 11 மணிக்குப் பிடித்து 1 மணி சுமாருக்கு விளாத்திகுளம் எதிர்க்கரை சென்றடைந்தேன். ஆற்றில் மிகப் பெரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. என்னை எதிர் கரையிலேயே சுமார் 1 1/2 மைல் கூட்டிச் சென்று, பரிசலில் ஊர் ஸ்மசானக்கரைக்குக் கூட்டிச் சென்றார்கள். என் தாயார் முன் தினம் இரவு பதினொரு மணிக்கே இறந்து விட்டாள். என் தந்தி அதிகாலையில்தான் அங்கு கிடைத்ததால் என் தாயின் உடலை ஸ்மசானத்துக்கு எடுத்துச் சென்று காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டு மணி வரை என் வருகைக்காகக் காத்திருந்தனர். தாயாரின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். விசேஷங்கள் முடிந்து மீண் டும் நான் காந்தி ஆசிரமம் செல்ல நவம்பர் 15 தேதிக்கு மேல் ஆகி விட்டது.

ஒரு நிகழ்ச்சி முன்கூட்டி எழுத மறந்து விட்டேன். என் தாயார் மறைவின் பின்னணியில் இந்த நிகழ்ச்சிகள் நினைவில் மோதுகின்றன. எம்.கே. சுந்தர் ராமய்யர், என்னைச் சந்தித்ததும், (1930 ஜூலை கடைசி வாரத்தில் என்று நினைக்கிறேன்) பெரியகுளத்தில் வீரபாகு அல்லது வீரபத்திரன்-பெயர் சரியாக நினைவிலில்லை.-என்பவருடன் இணைந்து அங்குள்ள கிராமங்களில் உள்ள தேசபக்தர்களைச் சந்தித்து, கிராமப் பிரச்சாரம் செய்யும்படி அனுப்பினார். பெரியகுளம், வீரபாண்டி, (விக்கிரவாண்டியோ?), தேனி, சின்னமனூர், உத்தம பாளையம், சுருளிப்பட்டி, காமையகவுண்டம்பட்டி, கோம்பை, தேவாரம், மார்க்கையன்கோட்டை, போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று, அரிக்கன்லைட், அல்லது தீவட்டிகள் வைத்துக்கொண்டு, ஊர் மக்களை 100, 200 பேர்கள் கூட்டி வைத்து, பாரதி பாடல்களைப்பாடி, எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல் வேன். அந்த அன்பரும் பேச்சாளரில்லை. ஏதோ பேசினோம். ஆனால் எல்லா கிராமங்களிலும் எங்களை அன்புடன் வரவேற்று உணவளித்து தங்க இடம் தந்து வேண்டிய சௌகரியங்களை செய்து கொடுத்தார்கள்.
என்னுடன் வந்த அன்பர், என்னை எல்லா இடத்திலும பிராமணன் என்று அறிமுகம் செய்து வைத்ததால், எனக்காக ஊர்வாசிகள் பிராமணர்கள் வீடுகளிலேயே உணவளிக்க ஏற்பாடு செய்து வந்தார்கள். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அன்பர் கேட்க வில்லை.

[(02 10 1984) (காந்தி ஜெயந்தி ) அண்ணல் காந்தியடிகள் 02 10 1869ம் தேதியில் பிறந்தார். இன்று அவருடைய 116 வது பிறந்த நாள். லால் பகதூர் சாஸ்திரியும் அக்டோபர் இரண்டாம் தேதிதான் பிறந்தார். அக்டோபர் இரண்டாம் தேதிதான் பெருந்தலைவர் காமராஜரும் அமரரானார்.]
பெரியகுளம் வட்டாரங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தும், போலீசார் எங்களுடன் தொடர்ந்து வந்தும் கூட எங்களிருவரையும் கைது செய்ய வில்லை. சுமார் பத்து பதினைந்து தினங்கள் வரை கிராமங்களில் பிரச்சாரம் செய்தோம். ஆகஸ்டு முதல் வாரம் திரு எம்.கே.எஸ். அவர்களிடம் சொல்லி விட்டு, விளாத்திகுளம் சென்றேன். என் தாயார், சகோதரர், அண்ணி மற்றும் நண்பர்களைச் சந்தித்தேன். சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின் அவர்கள் என்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால் என் தாயார் மட்டும் நான் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, தடை உத்திரவு போட்டு விட்டார். ஒரு வாரம் தங்கிய பின், மதுரை சென்று, எம்.கே.எஸ். அவர்களுடன், சிறை சென்றவர்கள் யார் யார் பட்டியல் தயாரிக்கச் சென்றேன். நான் விளாத்திகுளத்தில் இருந்து காலை சுமார் நாலரைக்குப் புறப்படும் முதல் பஸ்ஸில் சென்றேன். வண்டி போலீஸ் ஸ்டேஷன் முன் நின்றது. விளாத்திகுளம் சப் இனஸ்பெக்டர் முன் சீட்டில் ஏறிக்கொண்டார். எட்டையபுரத்தில் அவ்வூர் போலீஸ் சப் இனஸ்பெக்டர் முன் சீட்டில் ஏறிக்கொண்டார். அவர்கள் இருவரும் ரகசியமாகப் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் ஒன்பது மணிக்கு கோவில் பட்டி கதர் வஸ்திராலயத்தை ரெய்டு செய்யப் போவதாகப் புரிந்து கொண்டேன். கோவில்பட்டியில் இறங்கியதும் கதர் வஸ்திராலய நிர்வாகி வீட்டைத் தேடியலைந்து கண்டு பிடித்து ரெய்டு விஷயத்தைச் சொன்னேன். அப்போது காலை ஏழரை மணி இருக்கும். அவர் உடனே ஓடிச் சென்று ஆட்சேபகரமான தென போலீசார் கருதும் பல பிரசுரங்கங்கள், கடிதங்கள் முதலியவற்றை அப்புறப்படுத்தி விட்டார். ஆகவே போலீசார் ஒன்பது மணிக்கு மேல் ரெய்டு செய்தபோது, ஆட்சேபகரமான எந்த விஷயமும் அவர்கள் கையில் கிடைக்க வில்லை. இவ்விவரம் மதுரையில் பின் ஒரு நாள் கதரன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

செப்டம்பர் மாதம் என்னுடன் கொண்டு வந்திருந்த சில காலணா பிரசுரங் களை என் சகோதரர் விலாசத்திற்கு புக் போஸ்டு மூலம் அனுப்பி அவைகளை தொழிலாளர்கள் மூலம் கிராமங்களில் பரவச் செய்யும்படி கேட்டுக் கொண் டிருந்தேன். இது சி.ஐ.டி க்காரர்களுக்குத் தகவல் தெரிந்து, அவர்கள் அந்த புக் போஸ்டையும் கடிதத்தையும் தபால்காரர் டெலிவரி செய்யும்போது பறிமுதல் செய்தனர். இதற்கென திருச்சியிலிருந்து இரண்டு போலீசார் தனியாக வந்தனர். இது நடந்த சில தினங்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு, விளாத்திகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என் சகோதரரைச் சந்தித்து மறுநாள் காலை என் சகோதரர் வீட்டை ரெய்டு செய்யப் போவதாகவும், அதற்காக வெளியிலிருந்து ஸ்பெஷல் ஸ்குவாடு வந்து நாகலாபுரம் கேம்ப் சென்றிருக்கும் மாஜிஸ்ட்ரேட்டிடம் சர்ச் வாரன்டில் கையெழுத்து வாங்கப் போயிருப்பதாகவும், ரகசியமாகத் தெரிவித்திருந்தார். அது மகாலய பக்ஷமாதலால், அன்று என் வீட்டில் ஹிரண்ய ஸ்ரார்த்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரெய்டுக்கு வந்த போலீசார், வீட்டை சோதனை போட்டு, தேசியத் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் உள்ள பல சிறு புத்தகங்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை யெல்லாம் பறிமுதல் செய்து, Double Lock treasuryல் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். நல்ல வேளையாக ராகி எனக்கு எழுதிய கடிதங்கள், நான் என் சகோதரருக்கு அவ்வப்போது எழுதிய கடிதங்கள் எதுவும் அவர்கள் கையில் கிடைக்கவில்லை.
மகாலய தினத்தில் பல்வேறு ஜாதிக்காரர்கள், வீட்டில் சமையலறையிலும் புகுந்து சோதனை போட்டது என் தாயாரின் மனத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. அதன் காரணமாக அவருக்குப் பக்கவாத நோய் தாக்கி படுத்த படுக்கையாகி இரண்டு மூன்று வாரங்களில், 30 10 1930ல் நான் வீட்டை விட்டுச் சென்ற ஏழு மாதங்களில், தேக வியோகமாகி விட்டார். என் சகோத ரரையும் போலீசாரின் தூண்டுதலின் பேரில், டிபார்ட்மெண்டல் என்கொயரி எல்லாம் நடத்தி மிகுந்த தொந்திரவு அளித்து வந்தனர். இப்படியாக, நான் தேச சேவை சென்றது, என் குடும்பத்தாரையும் பாதித்தது. இந்த விவரங்களையெல்லாம் என் தாயார் இறந்த பின், என் சகோதரரும் மற்ற உறவினர்களும் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

நான் திருச்செங்கொட்டில் காலை 11 மணிக்கு கொடுத்த தந்தி விளாத்தி குளத்தில் மறுநாள் காலைதான் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இரவு 9 மணி க்குக் கோவில்பட்டியில் புறப்படும் கடைசி பஸ் பத்தரை மணிக்கு விளாத்தி குளம் போய்ச் சேரும். அதில் நான் வரக்கூடும் என்று எதிர்பார்த் திருந்திருக்கின்றனர். நான் வரவில்லை என்று தெரிந்ததும் என் மூத்த சகோதரியின் கணவர், 'அவன் எந்த ஜெயிலில் அடைபட்டுக் கிடக்கிறானோ?' என்று கூறினாராம். அதைச் செவி மடுத்த என் தாய், 'ஹா' என்று பெருமூச்சு விட்டு, அவர் ஆவி பிரிந்து விட்டதாம். என் தந்தியை இரவே தபாலாபீஸ் காரர்கள் என் வீட்டில் சேர்த்திருந்தால், ஒருக்கால் என் தாயார் அன்று இரவு இறந்திருக்க மாட்டாரோ என்று, எண்ண இடமிருக்கிறது. நிற்க.

நான் என் தாயார் கிரியைகளை முடித்துக்கொண்டு ஆசிரமத்துக்கு 1930 நவம்பர் மூன்றாவது வாரத்தில் பதினைந்து தேதிக்கு மேல் வந்து சேர்ந்தேன். தீபாவளி மாதத்தில் நடந்த அதிக வேலைப்பளு கணக்கு வழக்குகளைச் சரி பார்க்கும் வேலையில் ஈடுபட்டேன். தேசிய இயக்கம் சற்று வேகம் குறைந்தது போல் தோன்றியது. வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் காந்திஜிக்கும் இடையே கடிதத் தொடர்பு பேச்சு வார்த்தைகள், ஆரம்பித்து விட்டன. முடிவில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு விடுதலைப் போர் வீர்ர்கள் - அகிம்சாவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆசிரம ஊழியர்கள் பலரும், பல கால கட்டங்களில், முன்னரே விடுதலையானவர்கள் போக, எஞ்சியுள்ளவர்களும் விடுதலையாகி வந்தனர். அக்டோபர் மாதம் பெய்த பெரு மழையினால் வறட்சிப் பகுதியான காந்தி ஆசிரமத்திலும் பசுமைத் தோற்றம் விளைந்தது. இது மிகுந்த மன எழுச்சியைத் தந்தது.

காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைப் பிரசாரம் செய்வது என்று கோவை
மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டைப் புஞ்சைப் புளியம் பட்டி சென்டரில் நிர்வாகியாக இருந்த திரு சி ஏ அய்யாமுத்து ஏற்பாடு செய் திருந்தார். ஒரு வேன் ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டோம். ராஜாஜி, என். எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம், ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி), சி ஏ அய்யா முத்து, நான், மேலும் 2, 3 பேர்கள் இருந்தோம். காலணா பிரசுரங்களை விநி யோகிப்பது என் வேலை. ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், புளி யம்பட்டி, சத்தியமங்கலம் போன்ற ஊர்களுக்கும் இடையிலுள்ள பல கிராமங்க ளுக்கும் சென்றதாக நினைவு. கோபியில் திரு நல்லமுத்து கவுண்டர் (முத்து வேலப்ப கவுண்டர்) என்பவர் வீடு மிகப் பெரியது. பிற்பகல் மூன்று மணியள வில் அங்கு போய்ச் சேர்ந்தோம். இளநீர், நுங்கு, எலுமிச்சம்பழ சர்பத் போன்ற வைகள் அங்கு சென்றதும் தரப்பட்டன. பின்னர் 2, 3 வகை இனிப்பு, கார பதார்த்தங்களுடன் விமரிசையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. ராஜாஜி வேடிக் கையாக, 'எதற்காக இவ்வளவு பெரிய ஏற்பாடு?' என்று சொல்லவும், கவுண்ட ரவர்கள், 'சிறையில் வாடி வதங்கி வந்திருப்பவர்களுக்கு ஒரு மாறுதலுக்காகத் தான்' என்று கூறினார்.

சத்தியமங்கலத்திற்கு காலை 9 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த ஊர் சினிமா கொட்டடகையில் பிரசாரக் கூட்டம் நடந்தது. ஏராளமாக மக்கள் கூடி ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் திருமதி ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள். அம்மையாரும் சத்தியமங்கலம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டார். சத்தியமங்கலத்தில் சிறந்த தேசபக்தர்களான நாராயண சாஸ்திரி சகோதரர்கள் வீட்டில் எங்களுக்கு பகல் விருந்து. எல்லோரும் குளித்து உடை மாற்றி வந்து உட்கார்ந்தோம். ராஜாஜிக்கு ஒரு இலை. ராஜாஜி ஸ்நானம் செய்துவிட்டு வந்து, பலகையில் அமர்ந்தார். பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி, திருமண் பெட்டி, வெள்ளி டம்ளரில் தண்ணீர் எல்லாம் இருந்ததைக் கவனித்த ராஜாஜி, சிரித்துக கொண்டே 'நீங்கள் வைஷ்ணவர் இல்லையே!' என்றார். உடனே நாராயண சாஸ்திரியின் வயதான தாயார் 'நீங்கள் திருமண் இட்டுக் கொள்வதைப் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது.' என்றார். ராஜாஜி சிரித்துக் கொண்டே திருமண் குழைத்து, மெல்லியதாக வெள்ளைக் கோடுகளும், நடுவில் ஸ்ரீ சூர்ணக் கோடும் இட்டுக் கொண்டு, அந்த அம்மாளைத் திருப்திப்படுத்தினார். ராஜாஜி காந்திய அரசியலில் பங்கேற்ற பின் அவர் முகத்தில் நாமம் இட்டுக் கொண்டது மிகவும் அபூர்வமாக இருந்ததால், அன்று நாங்களும் அந்த முகத்தைப் பார்த்து, மிகவும் ரசித்தோம். வேனில் சென்று கொண்டிருந்த போது, ப்ளேட்டும், ஸ்பூனும் சுகாதாரமான போதும், இலையும் அவரவர் கையும்தான் அதிக சுகாதாரமானவை என்பது போன்ற சுவையான discussion நடந்தது.

நான் 1930 ஜூன் மாதத்தில் பெங்களூரிலிருந்து ஆசிரமம் திரும்பியபோது, அங்கு, க.பெ. சங்கரலிங்கம் (நாடார்) எனபவர், வந்து சேர்ந்திருந்தார். கல்கியவர்கள் ஒரு கடிதத்துடன் எங்கள் இருவரையும் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களைச் சந்தித்து அவர் அடுத்த சர்வாதிகாரியாக இயக்கத்தை நடத்த சம்மதிக்கிறாரா எனத் தெரிந்து வர அனுப்பினார். அவர், திரு என். நாகராஜ அய்யங்கார், கூடுதுறை கே.வி. வெங்கடாசல ரெட்டியார் போன்றோரிடம் எங்களை அழைத்துச் சென்று, ஆலோசித்த பின், தற்சமயம் சௌகரியப்படவில்லையே என்று சொல்லி விட்டார். அதன் பின்னர்தான் மதுரை டாக்டர் பிச்சமுத்து அம்மாள் சர்வாதி காரியாக நியமிக்கப்பட்டார் என நினைக்கிறேன்.

காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கு முன் ஆசிரமத்தில் நாங்கள் சிலர் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்து பார்க்கத் தீர்மானித்தோம். 1930 ஜனவரி 17ந் தேதி காலை ஆறு மணியிலிருந்து, 24ம் தேதி மாலை ஆறு மணி வரை, 168 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம். எங்களில் 2, 3 பேர்கள் மட்டுமே 6 நாட்கள் பூர்த்தி செய்தோம். ஏழாவது நாள் 23ம் தேதி காலை ஒன்பது மணியளவில், கே.சந்தானத்தின் மனைவி குளிக்கப் போனவர் வீடு திரும்பவில்லையென்று, அவருடைய மூத்த மகன் கஸ்தூரி (11 வயது பையன்) வந்து சொன்னான். உடனே தேடப் புறப்பட்toம். அப்போது ஆசிரமத்தில் இருந்த வால் கிணறு என்ற பெரிய கிணற்றில் (ஏழு ஏற்றக் கிணற்றில்) துணிகள் எல்லாம் துவைத்துப் பிழிந்து வைத்திருப்பதும், சோப்புப் பெட்டி திறந்து உபயோகப்பட்டிருப்பதுவும் , மஞ்சள் உரைத்து இருப்பதும் தெரிந்தது. ஆகவே ஒருக்கால் கால் வழுக்கி மூழ்கிப் போயிருக்கக் கூடும் என்று சந்தேகித்து தேடத் துவங்கினோம். முப்பது அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. ஆதலால் மூழ்குவது சிரமம். ஆயினும் பெரிய மூங்கில் கழிகளை வைத்துத் துழாவிப் பார்த்தபோது உடல் தட்டுப்பட்டது. அந்த இடத்தில் மூழ்கி உடலை மேலே கொண்டு வரப்பட்டது. காது மூக்கு போன்ற மெல்லிய திசுக்களை நண்டு அரிக்க ஆரம்பித்து விட்டது. போலீசுக்கு உடனே வந்து பார்க்கும்படி சொல்லியனுப்பினோம். அவர்களும் வந்து பார்த்து பஞ்சாயத்தார்கள், தவறுதலாகக் கால் வழுக்கி மூழ்கி விட்டதாக முடிவுக்கு வந்து ரிக்கார்டு செய்தார்கள். கே. சந்தானம் அப்போது வேலூர் சிறையிலிருந்தார். 'தகனம் செய்து விடவும்; வருவ தற்கில்லை.' என்று தந்தி வந்து விட்டது. மாலை ஏழு மணிக்கு திருப்பூரிலிருந்து ஸ்ரீ என். எஸ். வரதாச்சாரி வந்த பின் ஆசிரமத்தின் நிலப் பகுதியிலேயே தகனம் செய்யப்பட்டது. மறைந்த அந்த அம்மாளுக்கு நான்கு புதல்வர்களும் ஒரு பெண்ணும் - 11, 9, 7, 5, 2 என்ற வயதுகளில் குழந்தைகள். அவர்களையெல்லாம் மறு நாள் காலையில் வந்த திரு ராஜகோபாலய்யங்கார் - Retired Engineer - சந்தானத்தின் மாமனார் - வந்து மதனப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார்.

(06 10 1984) ஸ்ரீ கே. சந்தானம் ஆசிரமப் பணிக்கு மீண்டும் மேனேஜராக வரவில்லை. குழந்தைகள் ஐவரையும் காப்பாற்றும் பொறுப்பும் அவர் மீது விழுந்ததால், அவர் Indian Express ஆசிரியராக சென்னையில் குடியேறினார். குடும்ப பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே அரசியலிலும் மத்திய ரயில்வே அமைச்சர், லெஃப்டினெண்ட் கவர்னர், மற்றும் பல்வேறு கமிஷன்கள் தலைவர், காரியதரிசி பதவிகளும் வகித்தார். 'சுயராஜ்யா' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் இருந்தார். காந்திஜி, ராஜாஜி, நேருஜி போன்ற வர்களை வெகுவாக மதித்தவராயினும், அவர்களின் போக்கு தனக்குப் பிடிக்க வில்லையாயின் அதை வெளிப்படுத்தத் தயங்கியதே யில்லை. அவருக்குப் பதவி என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. அவர் தன் பெண் அம்மணிக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்மணிக்கு ஏழெட்டு பெண்கள் என்றும் எல்லாப் பெண்களுக்கும் திருமணங்கள் நடந்து விட்டதாகவும் , அம்மணி இப்போது கணவர் மறைவுக்குப்பின் வாழ்ந்து வருவதாகவும் அறிகிறேன். சந்தானத்தின் புதல்வர்கள் நால்வரில் ஒருவர் (ஸ்ரீனிவாசன் என்று நினைக்கிறேன்) - சின்ன வயதிலிருந்தே சற்று உடல் நலம் இல்லாதவர் - சந்தானம் இருக்கும்போதே கால மாகி விட்டார். மற்ற மூன்று புதல்வர்களில் - எஸ்.கஸ்தூரி கப்பல் துறை யிலும், டாக்டர். எஸ்.ராஜகோபால் விஞ்ஞான பௌதிகத்துறையிலும், எஸ். ராமானுஜம் பத்திரிகை விளம்பரத்துறையிலும், சிறப்புடன் இருந்து வருகிறார்கள்.
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தால், சத்தியாக்கிரக இயக்கம் வாபஸ் பெறப் பட்டது. கள்ளுக்கடைகளில் சாத்வீக மறியல், தலைச் சுமையளவு உப்பு எடுத்துச்சென்று விற்பனை செய்தல், போன்ற சலுகைகளை மக்கள் வெகுவாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். சிறை சென்ற ஆசிரம ஊழியர்கள் அனைவரும் விடுதலையாகி வந்து விட்டதால், ஆசிரம வேலைகள் முன்னை விட அதிக அளவில் விஸ்தரிக்கப்பட்டு நடந்தன. ஆசிரமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூன்று நான்கு மாதங்களுக்கு முன் பெரு மழை பெய்ததால் எல்லாக் கிணறுகள், குட்டை குளங்கள் பெருக்கெடுத்து ஓடின. அன்பர் சிவகுரு நாதன் நெல், வாழை, பப்பாளி போன்றவை சாகுபடியில் தீவிரமாக இறங்கி, நல்ல மகசூல் எடுத்தார். திராட்சைக் கொடியும் பறக்கவிட்டு நல்ல புளிப்பான திராட்சைப் பழங்களும் விளைவித்தார். வானம் பார்த்த பூமியில் கம்பு, சோளம், துவரை, பயறு, போன்றவையும் பயிரிடப்பட்டு வெற்றி கண்டோம். குடியானவப் பெண்மணிகளுக்கு, காடு, தோட்டம் வயல்களில் வேலை போது மானதாக இருந்ததால் நூல் நூற்பு வேலை பாதியாக குறைந்து விட்டது. பயிர் சுபிட்சம் அப்பகுதிகளில் ஐந்தாறு ஆண்டு களுக்கு ஒரு முறைதான் வரும் அது இந்த 1931 ம் ஆண்டில் கிடைத்தது.

8, 10 மணி நேரம் தினமும் நூல் நூற்றாலும் ஆறு, ஏழு நாட்களுக்கும், சேர்த்து அவர்கள் பெறக்கூடியது, பதினைந்து அணா அல்லது ஒரு ரூபாய்தான். ஆனால், அன்று வாரம் ஒரு ரூபாயில் ஒருவர் வயிற்றுக்குப் போதுமான உணவு தானியங்கள் வாங்கவும், இதர உப்பு, புளி வகைகள், வெற்றிலை, பாக்கு, புகை யிலை வாங்கவும் முடிந்தது. அந்த நாட்களில், எல்லா சாமான்களும் கொள்ளை மலிவு; ஆயினும், பட்டினியால் வாடியவர்களும் ஏராளமாக இருந்தனர்.

(09 10 1984) ஆகவே நூற்புத்தொழில், கிராமத்து மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருந்தது. காந்தி ஆசிரமத்தை, அதைச் சுற்றியுள்ள இருபது மைல் சுற்றளவிலுள்ள கிராமத்து மக்கள் விசேஷமாகப் போற்றினர். நாள் ஆசிரமத்தில் சேர்ந்த 1930ம் ஆண்டில் சுமார் 10000 நூற்போர்களும் சுமார் நானூறு நெசவாளரும், சலவை செய்தல், சாயம் தோய்த்தல், அச்சிடுதல் போன்ற தொழில்களிலுமாக சுமார் 500 குடும்பங்கள் பயன் பெற்றனர். இந்த வேலைகளில், எனக்கு இடப்பட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வந்தேன்.

 தேசிய இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே அரசுக்கும் தொண் டர்களுக்கும் சிறு சிறு மோதல்கள் இருந்துகொண்டு வந்தன. 1931ல் வருடக் கடைசியில் லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூட்டப் பட்டது. பல்வேறு துறைகள், அரசியல் கட்சிகள், தங்கள் பிரதிநிதிகள் பலரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ், தன் ஏக பிரதிநிதியாக அண்ணல் காந்தியடிகளைத் தேர்ந்தெடுத்தது. காந்திஜி சென்று எதிர்பார்த்தபடியே வெறுங் கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. 1932 ஜனவரி ஆரம்பத்திலிருந்தே நாட்டில் மீண்டும் அகிம்சை, சத்தியாக்கிரகம், அரசின் விரோதப் போக்கினால் தோன்றி காந்திஜி பம்பாய் துறைமுகத்தில் வந்திறங்கும் முன்னரே பல தேசியத் தலைவர்கள், கைது செய்யப்பட்டு சிறைகளுக்கும் அனுப்பப்பட்டனர். அண்ணல் வந்து இறங்கியதும் அரசைக் கண்டித்து அறிக்கைகள் விட்டார். அவரும் கைது செய்யப்படடார். நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தேசபக்தர்கள், தாங்களாகவே அன்னிய துணிக்கடைகள் முன் மறியல், கள்ளுக்கடை மறியல், பள்ளி கல்லூரிகள் முன் மறியல், போன்ற பல வழிகளில் ஆயிரக்கணக்கில் சிறை சென்றார்கள். நான் என் ஜில்லா போர்டு வேலையை ராஜினாமா செய்து ஆசிரமத்துக்கு வந்ததே வேதாரணியம் சத்தியாக்கிரகத்தில் ஒருவனாகப் பங்கேற்று சிறை செல்ல வேண்டுமென்ற நோக்கம்தான். 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருடம் இயக்கத்திலாவது சிறை சென்றுவிட வேண்டுமென்ற உள்ளத்துடிப்பு வெகு பலமாக ஏற்பட்டு விட்டது. ஆகவே ஆசிரமப் பணியிலிருந்து விடுபட்டு நாமக்கல்லில் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வதென்று தீர்மானித்து விட்டேன். அது பலன் அளித்தது. 1932 பிப்ரவரி மாதம் 15ந் தேதி வாக்கில், சத்தியாக்கிரகம் செய்து சிறை புகுந்தேன். அதன் விவரம் மேலும் எழுதுவேன்.

(13 10 1984) பெங்களூர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா அவர்களைப் பற்றிய ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. அதை இப்போதே எழுதி விடுகிறேன். பிரம் மச்சாரி கிரஹஸ்தர் ஆனார். அதைப்பற்றி நான்றிந்த வரலாறு இதுதான். திரு ராமச்சந்திரா தினம் துவைத்த ஆடைதான் அணிவார். சலவை செய்தவை அணிவதில்லை. முழங்காலளவு நாலு முழத்துண்டு இடுப்பில். கை வைத்த பனியன் உடலில். மேலே மற்றொரு நாலு முழத் துண்டு. எளிய தோற்றம். எவரையும் கவர்ந்திழுக்கும் புன்சிரிப்பு முகத்தில் எப்போதும் தவழும். பல பெரிய மனிதர்கள் செல்வந்தர்கள் குடும்பங்களில் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதை நான் நேரில் கண்டவன். அவருடைய தியாகத் தன்மையும் எளிய வாழ்க்கையும் அவருடன் நட்பு கொள்ள பலர் விரும்பியதில் ஆச்சரியமில்லை. மங்களூரைச் சேர்ந்த நடுத்தர வயது தம்பதியர் அவரிடம் பெரு மதிப்பு வைத்து அவரிடம் அடிக்கடி வந்து சம்பாஷித்துச் செல்வதுண்டு. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராமச்சந்திராவுடன் அவர்கள் நட்பு அதிகரித்து வந்தது. அந்தப் பெண்மணிக்கு ஒரு கவர்ச்சி நிலை யேற்பட்டது. அந்தப் பெண்மணி சற்று Hysterical கூட. மங்களூர்காரர்களில் பல பெண்மணிகள்  சுயேச்சை உணர்வுகள் கொண்டவர்கள். இந்தப் பெண்மணி ராமச்சந்திராவுடன் தங்கி விட தீவிரமாக விருப்பம் கொண்டு விட்டார். அவருடைய கணவரும் இவரை மாற்ற முடியாது என்ற புரிந்து கொண்டு ராமச்சந்திராவுடன் அவர் இருந்து வர அனுமதித்து விலகிக் கொண்டார். அந்தப் பெண்மணியைக் காப்பாற்றும் பொறுப்பு ராம சந்திராவுக்கு ஏற்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின் ராமச்சந்திரா அவர்கள் பாரத் சேவக் சமாஜத்தில் இணைப்பு அதிகாரியாகப் (Liason Officer) பதவியேற்று பல நாடுகளுக்கும் சென்று வந்தார். சில மாதங்களுக்கு முன் (Hindu Obituary Column)ல் மேஜர் டி. ராமச்சந்திரா காலமான செய்தியைப் படித்தேன். நானறிந்த வரை இந்தத் தம்பதியருக்கிடையேயான உறவு, சாதாரண மனிதர்களைப் போல, வெறும் காம இச்சையினால் விளைந்ததில்லை என்றே, நம்புகிறேன். இதுவே அதிதீவிர பிரம்மச்சாரி கிரஹஸ்தரான கதை. இறைவன் படைப்பில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழவே செய்கின்றன.

No comments:

Post a Comment